தமிழகத்தில் கோர தாண்டவமாடிய புயல்கள்.. ஃபானூஸ் புயல் முதல் வர்தா வரை ஒரு பார்வை !
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை ஃபானூஸ், நிஷா, ஜல், தானே, நீலம், மடி, வர்தா என பல பல்வேறு பெயர்களை கொண்ட புயல்கள் தாக்கியுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வையை இங்கு காணலாம்.
ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை விடுப்பதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது.
ஃபானூஸ் புயல்
தமிழகத்தைத் தாக்கிய பெரும் புயல்களில் ஒன்று ஃபானூஸ். கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி உருவான இந்தப்புயல் மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இந்த புயலால் சுமார் 25 ஆயிரம் பேர் வீட்டை விட்டு வெளியேற நேரிட்டது. அதோடு, வட தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் கடுமையாக பாதித்தது.
நிஷா புயல்
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி வங்கக் கடலில் உருவானது இந்த புயல். மறுநாள் மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் புயலால் 189 பேர் உயிரிழந்தனர்.
ஜல் புயல்
கடந்த 2010-ம் ஆண்டில் உருவான ஜல் புயல், சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்த புயலால், 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த புயல் சீற்றத்தால் 54 பேர் உயிரிழந்தனர்.
தானே புயல்
கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவானது தானே புயல். இந்தப் புயல் டிசம்பர் 30-ல் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. இதில் தமிழகத்தில் 46 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின.
நீலம் புயல்
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31-ம் தேதி புயலாக மாறியது. நீலம் என பெயரிடப்பட்ட இந்த புயல், மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. இந்த புயலால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.
மடி புயல்
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி உருவான இப்புயல், மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் வேதாரண்யம் பகுதி வழியாகக் கடந்தது. இதன் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வர்தா புயல்
சென்னையை தற்போது வர்தா புயல் தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு "வர்தா' என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது.
உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும். சென்னையையே புரட்டிப் போட்டு தாண்டவமாடிய இந்த புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.