ரயில்வே பட்ஜெட்: ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
சென்னை: ரயில்வே ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வகையிலும் ரயில்வே பட்ஜெட் அமைய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''மத்திய ரயில்வே அமைச்சர் 2016-17-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இம்மாதம் இறுதியில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் தமிழகத்தில் முடங்கிப் போயுள்ள ரயில்வே திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு இடம் பெற வேண்டும்.
இதன்படி, திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் பாதைக்கான ஆய்வுப் பணிகள் முடிந்து பூர்வாங்க வேலைகள் தொடங்கி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சென்னை-மதுரை இரட்டை வழிப்பாதைத் திட்டம் 8 ஆண்டுகளாக தாமதமாக நடைபெறுவதால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் போக்குவரத்து தொடங்கியிருக்க வேண்டிய இத்திட்டம் இன்னும் கால தாமதமாகிறது.
மதுரை-கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. மதுரை-போடி அகல ரயில்பாதைத் திட்டம் 2010-ல் தொடங்கப்பட்டு போதுமான அளவு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கி உள்ளன.
இதேபோல், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி இரட்டை வழிப்பாதை, சேலம்-காரைக்கால்-பெரம்பலூர் அகல ரயில் பாதை, சிதம்பரம்-ஆத்தூர், தஞ்சாவூர்-அரியலூர், மொரப்பூர்-தருமபுரி, மயிலாடுதுறை-திருக்கடையூர்-தரங்கம்பாடி, திருநள்ளாறு-காரைக்கால் உள்பட பல்வே ரயில்வே திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இத்திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
மேலும், ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளான 7-வது ஊதியக் குழுவில் ரயில்வே தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள பரிந்துரைகளை மாற்றி அமைக்கவும், ரயில்வேயை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து சமூகப் பாதுகாப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வகையிலும் ரயில்வே பட்ஜெட் அமைய வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.