டிடிவி தினகரன் தேர்தலில் இனி போட்டியிடக் கூடாது... தகுதி நீக்கம் செய்ய ஜி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்
ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் நடைபெற இருந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. மேலும் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.
இந்தச் சோதனை தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை நேற்று சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இந்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக திடீரென நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜி. ராமகிருஷ்ணன் கூறும் போது, ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. அதனால்தான் தேர்தல் ரத்து என்ற முடிவை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்று கூறினார்.
அதே நேரத்தில் எந்த வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்தார் என்று ஆதாரம் கிடைத்ததோ அதன் அடிப்படையில் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், ஆர்.கே. நகரில் அடுத்து அறிவிக்கப்படும் இடைத்தேர்தலில் அந்த நபர் கண்டிப்பாக போட்டியிடக் கூடாது என்றும் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.