வைகோவை சந்தித்தார் ஜி.ராமகிருஷ்ணன்: மக்கள் பிரச்சினையில் இணைந்து போராட முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கவுரவக்கொலைகள் அதிகரித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்கள் பிரச்சினையில் இணைந்து போரடவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசியதாக கூறிய அவர், இது சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கான சந்திப்பு இல்லை என்று தெரிவித்தார்.
சென்னை ம.தி.மு.க.அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார். முல்லை பெரியாறு அணைக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறினார். ஊழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களுக்கு எதிரான செயல்பட்டு வருகின்றன.
மக்கள் பிரச்சினையில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்படவேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பு என்று கூறினார் ஜி.ராமகிருஷ்ணன். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கவுரவக் கொலைகள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், இதுவரை தமிழகத்தில் 60 பேர் கவுரவக் கொலை செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இது சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அல்ல. மக்கள் பிரச்சினைக்காக கூட்டாக இணைந்து செயல்படுவதற்காகவே இப்போது பேசி வருவதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
ஏற்கனவே மக்கள் பிரச்சினையில் இணைந்து போராட விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் தனித்தனியாக அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து பேசினர். இப்போது ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார்.