'மதுவாடை' விஜயகாந்துக்கு மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு இல்லை: தமிழருவி மணியன்!
திருப்பூர்: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்திற்கு மதுவாடையுடன் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைக்க மாட்டோம் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு இலவச திட்டங்களை கொடுக்கவேண்டும் என்பதற்காக மதுவிற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம்? மதுவினால்தான் இன்றைக்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மதுவிற்பனையை தடை செய்யவேண்டும். 22, 000 கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றுவது சரியல்ல.
மதுவின் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருகின்றனர். சாலை விபத்துகளின் மூலம் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில்தான்.
எனவே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கம் சென்னையில் ஆகஸ்ட் 16ந் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளது. மது ஒழிப்புக்காக தனித்தனியாக போராடிவரும் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து இந்த போராட்டம் நடைபெறும்.
மதுவின் வாடையே இல்லாத மனிதர்களைத்தான் இந்த போராட்டத்தில் முன்னிலைப்படுத்த முடியும். விஜயகாந்தை முன்னிறுத்தினால் போராட்டத்தின் நம்பகத்தன்மையே போய்விடும் எனவே இந்த போராட்டத்தில் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கமாட்டோம்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
பெங்களூருவில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பினைப் பொறுத்து தமிழகத்தில் 2015ம் ஆண்டே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காந்திய மக்கள் கட்சி போட்டியிடும்.
2020 வரை ஜெயலலிதாதான்
வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வராவது உறுதி. இன்னும் சில ஆண்டுகளில் திமுகவின் கோட்டை கலகலத்துப் போகும்.
விஜயகாந்த் கனவு கானல் நீர்
தமிழக முதல்வராகவேண்டும் என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதல்வர் கனவு கானல் நீர்தான்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
மோடி 30 நாள் ஆட்சி
பின்னர் மோடியின் 30 நாள் ஆட்சி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழருவி மணியன், 30 நாட்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. மக்கள் எதிர்பார்பை நிறைவேற்றும் அளவிற்கு மோடி அரசு அமைந்துள்ளது. சில கசப்பு மருந்துகளை கொடுக்கவேண்டிய இடத்தில் மோடி அரசு இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது அவசியம் என்று கூறினார்.
இந்தி திணிப்பு கூடாது
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் இந்திய யூனியன் என்றுதான் உள்ளது. இந்தியாவில் மொழிப்பிரச்சினை தேவையில்லை. தமிழகத்தில் மீண்டும் ஒரு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தேவையில்லை என்றும் கூறினார்.