சம்பந்தமே இல்லாமல், இன்று திடீரென ரஜினியைச் சந்தித்த கங்கை அமரன்
சென்னை: ஆர் கே நகர் தொகுதியின் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, தனது விஷமப் பேச்சால் மொத்த வெறுப்பையும் சம்பாதித்து வரும் கங்கை அமரன், இன்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இரு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தவர் கங்கை அமரன். அவரது பையனூர் பங்களா மற்றும் நிலங்களை சசிகலாவின் ஆட்கள் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டதாக குற்றம் சாட்டி பரபரப்பு கிளப்பியதால், அவரையே ஆர் கே நகர் தொகுதியின் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது அந்தக் கட்சி.

ஆனால் கங்கை அமரனோ முன்னுக்குப் பின் முரணாகவும், வெறுப்பைக் கிளப்பும் வகையிலும் பேசி வருகிறார். ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் பெற பாடுபட்ட திராவிட இயக்கங்களை மிக மோசமாகப் பேசி வெறுப்பை சம்பாதித்து வருகிறார். நேற்று தனது சொந்த சகோதரர் இளையராஜாவை பேசிய விதம் பார்த்து சமூக வலைத் தளங்களில் காய்ச்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் கங்கை அமரன்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் சம்பந்தமே இல்லாமல் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் கங்கை அமரன். வழக்கம்போல இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறிவிட்டார்.
"இப்போது கங்கை அமரனுக்குத் தேவை பரபரப்பான செய்திகளில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். அந்த ஒரே காரணத்துக்காக தொலைக்காட்சி மைக்குகளைப் பார்த்ததும் கண்டதையும் பேசுகிறார். அடுத்து சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கிறார். நேற்று இளையராஜாவை வைத்து விளம்பரம் தேடினார். இன்று சூப்பர் ஸ்டார்... நாளை வேறொரு பிரச்சினையை ஆரம்பித்துவிடுவார்," என கருத்திட்டுள்ளனர் வலைவாசிகள்.












Click it and Unblock the Notifications