செல்போனில் பேசியதைக் கண்டித்த தந்தை... மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை: எந்நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் முத்துக் குமார் என்பவரின் மகள் 18 வயது சினேகா. இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
கையில் செல்போனுடன் எப்போதும் யாராவதுடனாவது பேசிக் கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும் சினேகா இருந்ததாகச் சொல்லப் படுகிறது. படிக்கிற வயதில் செல்போனில் பேசி காலத்தை வீணடிக்காதே எனக் கண்டித்துள்ளார் அவரது தந்தை.
இதனால், மனமுடைந்த சினேகா வீட்டில் யாருமற்ற வேளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜே ஜே நகர் போலீசார் சினேகாவின் உடலைக் கைப்பற்ரி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சினேகாவின் தற்கொலைக்கு செல்போன் மட்டும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்றக் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.