பாம்பாறு ஓடைகளிலும் 100 தடுப்பணைகள் கட்டினால் தமிழக விவசாயம் என்னாவது? - ஜி.கே.வாசன்
சென்னை: குப்பம் வனப்பகுதியிலிருந்து வரும் பாம்பாறு ஓடைகளின் குறுக்கே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டி, தமிழகத்துக்கான தண்ணீர் வரத்தை ஆந்திரம் தடுத்துள்ளதற்கு என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆந்திரத்தின் குப்பம் வனப்பகுதியில் இருந்து, பாம்பாறு ஓடைகள் மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது. பாம்பாறு மூலம் கிடைக்கும் தண்ணீர் பர்கூர் அருகே 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஓதிக்குப்பம் ஏரியைச் சென்றடையும்.
அதன்பின், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஏரிகள் வழியாக 40 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீர் பாய்ந்து ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு வந்து சேரும். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் விவசாயம் செழிப்புடன் நடைபெற்றது.
ஆனால், நாளடைவில் ஓதிக்குப்பம் முதல் பாம்பாறு அணை வரை உள்ள ஆற்றுப் பகுதியானது கழிவு நீர் ஓடையாக மாறி, அணைக்குப் போதிய நீர்வரத்தும் இல்லாமல் போனது. நிலத்தடி நீர் அளவும் குறைந்து விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.
ஆந்திரத்தின் குப்பம் வனப்பகுதியில் உருவான நீரோடைகளின் குறுக்கே ஆந்திர அரசு கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான சிறு தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்துக்கு தண்ணீர் வரத்தினைக் குறைத்துவிட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டியதால் ஓதிக்குப்பம் ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் பாம்பாறு வறண்டுவிட்டது.
எனவே, ஓதிக்குப்பம் ஏரிக்கு கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதி விவசாயம் பாதிக்கப்படாமல் விவசாயிகளின் நலன் காக்கப்படும்," என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications