தமிழகத்தில் அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணியே: ஜி. கே. வாசன் 'நறுக்'
திருவள்ளூர்: தமிழகத்தில் தேர்தலையொட்டி அமைந்துள்ள கூட்டணிகள் சந்தர்ப்பவாத கூட்டணிகள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் காங்கிரஸ் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வாசன் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு கல்விக்கென ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 32 கோடியையும், மதிய உணவு திட்டத்திற்காக ரூ.13 ஆயிரத்து 215 கோடியையும் ஒதுக்கியுள்ளது. இதனால் 13 கோடி மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
நகர் மற்றும் கிராமப்புறங்களில் அனைவரும் மருத்துவ வசதி பெற ரூ.37 ஆயிரத்து 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 22 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 5 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ரூ. 66 ஆயிரத்து 159 கோடியும், சிறுபான்மை மக்களுக்கான 15 அம்ச திட்டத்திற்கு ரூ.3 ஆயிரத்து 511 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிடும் கூட்டணிகள் எல்லாம் கொள்கையின் அடிப்படையில் அல்லாமல் சந்தர்ப்பவாதத்தால் அமைந்த கூட்டணி. சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள் மற்றும் கொள்கை முரண்பாடு உடையவர்கள் ஆகியோர் தான் வாக்கு கேட்டு உங்களைத் தேடி வருகிறார்கள்.
இந்தியாவை பொருளாதார வகையில் உயர்த்தும் சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அரசே தற்போது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தான்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், பிரதமர் வேட்பாளர் யார் என்பதையும் அறிவிக்காமல் போட்டியிடுவது தலைவர் இல்லாத கப்பல் முறையாக பயணிக்காது என்பதை தான் உணர்த்துகிறது என்றார்.