என்னது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோமா? திட்டவட்டமாக மறுக்கும் ஜி.கே. வாசன்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தமாகா. அந்த கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்க தமாகா மறுத்ததால் அதிமுகவுடனான பேச்சுவார்த்தை முறிந்தது. இந்த நிலையில் திடீரென பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என அறிவித்தார்.

பாஜகவுடன் பேச எதிர்ப்பு
இது தமாகாவில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்ட தமாகா, மதவாத பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா? என கொந்தளித்தனர். இதனால் பீட்டர் அல்போன்ஸ் போன்ற தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்திருந்தனர்.

கலகலத்த தமாகா
பின்னர் ஒருவழியாக மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் மீண்டும் இணைந்து வருகின்றனர்.

இளங்கோவன் காட்டம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், தமாகாவினர் காங்கிரஸ் வருவதை வரவேற்கிறோம்.
ஆனால் மகாத்மா காந்தியை கொன்ற, பெருந்தலைவர் காமராஜை கொலை செய்ய முயற்சித்த மூதாதையர்களைக் கொண்ட பாஜகவுடன் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஜிகே வாசன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவர் காங்கிரஸில் சேர லாயக்கற்றவர் என சாடியிருந்தார்.

வாசன் மறுப்பு
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்கள் வாசனிடம் கேள்வி எழுப்பிய போது, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை. எங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவும் வேண்டாம் என்றார்.












Click it and Unblock the Notifications