'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்' தொடங்க ஜி.கே.வாசன் முடிவு?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைத் தராவிடால் 'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்" என்ற பெயரில் கட்சியை நடத்தவும் முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடவே முடியாது என்று மறுத்துவிட்டார் மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன். இதனால் காங்கிரஸ் மேலிடம் அவர் மீது கடும் கடுப்பில் இருந்தது.
அதை தணிக்கும் வகையில் சூறாவளி சுற்று பிரசாரம் நடத்தினார். ஆனாலும் பலனளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது.
ராஜ்யசபா வாய்ப்பு நிராகரிப்பு
அதைத் தொடர்ந்து விரைவில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் தமக்கு கர்நாடகாவில் இருந்து வாய்ப்பு கொடுக்குமாறும் மேலிடத்தில் கேட்டுப் பார்த்தார். ஆனால் வாசனை காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவில்லை.
ஞானதேசிகனை நீக்கிவிட்டு..
இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகனை நீக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கோஷ்டி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவி
ஞானதேசிகன் தமது ஆதரவாளராக இருந்த போதும் இதனை பயன்படுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தமக்கு தருமாறு இப்போது வாசன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
"'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்'" ?
இதனையும் ஏற்காமல் காங்கிரஸ் மேலிடம் உதாசீனப்படுத்தினால் "'தமிழ்நாடு காமராஜ் தேசிய காங்கிரஸ்'" என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்குவோம் என்று வழக்கம் போல வாசன் தரப்பு மிரட்டல் விடுத்து வருகிறது.
வழக்கமான மிரட்டலே!
ஆனால் ஒவ்வொருமுறையும் வாசன் இப்படித்தான் தனிக்கட்சி பெயரில் "மிரட்டல்" விடுத்து வருவதால் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என்ற போக்கில் செல்ல முடிவு செய்துள்ளதாம் காங்கிரஸ் மேலிடம்..
தமிழக காங்கிரஸில் வருமா கலகக்குரல்?