விதம் விதமான நகைகள்.. கழுத்து நிறைய சிரிப்புடன் பெண்கள்.. களை கட்டிய அட்சய திரிதியை!
சென்னை: அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே தங்கம் வாங்குவதற்கு சென்னையில் பல்வேறு நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெண்களுடன் ஆண்களும் போட்டி போட்டுக்கொண்டு நகை வாங்கினர். பொதுமக்கள் வாங்கும் நகைகளுக்கும் பாதுகாப்பு தருவதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் தி.நகரில் உள்ள நகைக்கடைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கமும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் சென்னையில் பல்வேறு நகைக்கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டு பரபரப்பாக விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. பெரும்பாலான நகைக்கடைகள் காலை 7 மணிக்கே திறக்கப்பட்டது. சில நகைக்கடைகள் அதிகாலை 5.30 மணிக்கே திறக்கப்பட்டது.

அலைமோதிய கூட்டம்
தி.நகர் தவிர நகைக்கடைகள் அதிகம் நிறைந்த அண்ணாநகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், அடையாறு, சவுகார்பேட்டை, பாரிமுனை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, தாம்பரம் ஆகிய இடங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் நகைகளை அணிந்து பார்த்து வாங்கினர்.

நகை விற்பனை அமோகம்
சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து நகைக்கடைகளிலும் இன்று நகை வியாபாரம் அமோகமாக இருந்தது. வாடிக்கையாளர்களை கவர ஏராளமான புது டிசைன்களில் நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இன்றைய தினம் ஏதாவது ஒரு தங்க நகை வாங்க வேண்டும் என்பதற்காக கம்மல், வளையல், மோதிரம் போன்றவற்றை வாங்கிச்சென்றனர்.

நாங்களும் வாங்குவோம்ல
குழந்தைகளும், பெண்களும் நகைகளை அணிந்து அழகு பார்க்க உடன் சென்ற ஆண்களும் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். பிரேஷ்லெட், மோதிரம், நாணயம், செயின் போன்றவை வாங்கிச் சென்றனர்.

திருவிழாகோலத்தில்
நகைக்கடைகள் முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. துணி பந்தல் போடப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் வாங்கிய அனைத்து நகைகளையும் ஒவ்வொன்றாக பூஜை செய்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர். இதற்காக வரவேற்பறையில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெருமாள், குபேரலட்சுமி, தனலட்சுமி, ராமர் ஆகிய சாமி படங்களுக்கு வேத விற்பனர்கள் தனித்தனியாக பூஜை செய்து வாடிக்கையாளர்களிடம் வழங்கினார்கள்.

போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை
நகைக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பகுதியில் துரிதமாக செயல்பட்டு உடனுக்குடன் போக்குவரத்தை சரி செய்தனர்.

தங்க தோசை சாப்பிடுங்க
நகை விற்பனை ஒருபுறம் இருக்க அட்சய திரிதியையை முன்னிட்டு நெல்லையில் ரூ.555க்கு தங்க தோசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.333க்கு வெள்ளி தோசையையும் உணவகம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. சுத்த தங்கத்தால் ஆன இந்த காகித தோசையை உண்பதால் தீங்கு இல்லை என தகவல் தெரிவிக்கவே இதனை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர் வாடிக்கையாளர்கள்.












Click it and Unblock the Notifications