ஒரு மதுரைக்காரருக்காக லோகோவையே மங்கலாக மாற்றிய கூகுள்.. யார் இவர்? ஏன்?
இன்றைய கூகுள் டூடுலில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி இடம்பிடித்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: இன்றைய கூகுள் டூடுலில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி படம் இடம்பிடித்து இருக்கிறது. இவரின் வாழ்க்கை மெய்சிலிர்க்க வைக்க கூடியது.
கூகுள் தனது லோகோவை முக்கியமான நபர்களுக்காக தினமும் மாற்றும். கூகுள் டூடுல் என்று அழைக்கப்படும் இதில் உலகின் சிறந்த நபர்களின் பிறந்த நாள், இறந்த நாளின் போது மரியாதை அளிக்கப்படும்.
இந்த நிலையில் தமிழகத்தின் மதுரையில் பிறந்து வளர்ந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்த நாளை கூகுள் தனது லோகோவை மாற்றி கொண்டாடி உள்ளது. இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
[ 23 சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முன்பே சபரிமலை கோயிலுக்கு சென்ற முதல் பெண் இவர்தான்... ]
யார் இவர்
கோவிந்தப்பா வெங்கடசாமி 1 அக்டோபர் 1918 பிறந்தார். இவர்தான் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர். இந்தியாவில் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாழ்வளித்தவர் இவர்தான். கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி இவர் இயற்கை எய்தினார்.
அரவிந்த் மருத்துவமனை
இவர் அரவிந்த் கண் மருத்துவமனையை 1976ல் நிறுவினர். இவருடைய 56 வயதில் இந்த மருத்துவமனையை தொடங்கினார். வெறும் 11 பெட்டுகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இப்போது 7க்கும் மேற்பட்ட கிளைகளும், 70க்கும் மேற்பட்ட செண்டர்களும் என்று விரிந்து வளர்ந்து இருக்கிறது.
என்ன சாதனை
இந்த மருத்துவமனை பல சாதனைகளை செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை 55 மில்லியன் மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு இருக்கிறது. 6.8 மில்லியன் பேருக்கு சர்ஜரி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 50 சதவிகிதமோ இல்லை அதற்கும் அதிகமான நபர்களுக்கோ இலவசமாக சிகிச்சை பார்த்து இருக்கிறார்கள். பெரும் சேவையாக அந்த மருத்துவமனை இதை செய்து வருகிறது.
பெரிய மரியாதை
கோவிந்தப்பா வெங்கடசாமி, சக மருத்துவர்களால் டாக்டர் வி என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவர் மட்டுமே தனிப்பட்ட முறையில் 1 லட்சம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து இருக்கிறார். இவரது சேவையை பாராட்டும் வகையில் இவருக்கு 1973ல் பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.
கூகுள் டூடுல்
இந்த நிலையில்தான் இன்று அவருக்காக கூகுள் டூடுல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூகுளின் முதல் மூன்று எழுத்துக்கள் மங்கலாக உள்ளது. அதன்பின் அங்கு கோவிந்தப்பா வெங்கடசாமி புகைப்படம் வந்த பின் மங்கலான எழுத்துக்கள் தெளிவாகிறது. அவர் கண் மருத்துவ உலகில் ஆற்றிய சாதனையை பாராட்ட இப்படி மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.