மாணவர்களின் ரேங்க் சாதனைகள் - அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் பெற்றோர்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்விலும், 10ம் வகுப்பு தேர்விலும் மாநில அளவில் 1 மற்றும் இரண்டாம் இடத்தை தட்டி சென்றதால் இத்தனை நாளும் அரசு பள்ளியை புறக்கணித்த பெற்றோர் தற்போது அரசு பள்ளியில் சேர்க்க போட்டா போட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறிக்கோளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி கல்விதுறை செயல்பட்டு வருகிறது. இந்த குறிக்கோளை அடைவதற்காக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே வருகிறது. மேலும் மாநில ரேங்க் பெறுவதும் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் அபார சாதனை செய்து அரசையும், தனியார் பள்ளிகளையும் வியக்க வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வில் மட்டும் 887 அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு 482 பள்ளிகள் மட்டுமே இந்த சாதனை படைத்தன. இந்தாணடு இது கூடுதலாக அதிகரித்துள்ளது.
நம்பர் 1 மாணவி
பத்தமடை அரசு பள்ளியை சேர்ந்த பாஹூரா பானு 499 மதிபபெண் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
400க்கு மேல் மதிப்பெண்கள்
88 ஆயிரத்து 840 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்து வந்ததால் அனைவரும் அரசு பள்ளியை திரும்பி பார்க்க துவங்கியுள்ளனர்.
இதவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்த அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்வதற்காக மாணவர்கள் அணி திரள துவங்கியுள்ளனர்.
சாதிக்கும் அரசுப் பள்ளிகள்
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை அரசு பள்ளியில் படித்து சாதனை படைக்கும் மாணவரை மட்டும் இழுத்து விட்டு மற்ற மாணவர்களை அம்போ என விட்டு விடுகிறார்கள். இதனால் இந்த தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியே மேல் என்ற முடிவுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வந்து விட்டனர்.
காத்திருக்கும் பெற்றோர்கள்
இந்த நிலையில் நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் 2ம் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அங்கு பிளஸ் 1ம் வகுப்பில் சேர கடும் போட்டி நிலவி வருகிறது. பலர் அதை சுற்றியுள்ள தனியார் பள்ளிகளை புறக்கணித்து விட்டு கல்லணை அரசு பள்ளியில் விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் தேவை
தனியார்பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.