பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மரபு மீறி செயல்படுகிறார்.. திருமாவளவன் பரபர குற்றச்சாட்டு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மரபு மீறி செயல்படுகிறார் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மரபு மீறி செயல்படுகிறார் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ அண்மையில் வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய பேராசிரியையே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிர்மலாவிடம் விசாரணை
நிர்மலா தேவியை கண்டித்து பெற்றோர்கள் மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிர்மலா தேவி குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
ஆனால் மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அவசரமாக குழு அமைப்பு
இதையடுத்து பல்கலைக்கழகத்தின் 5 பேர் கொண்ட குழு வாபஸ் பெறப்பட்டது. நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் அவசரமாக குழு அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநர் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மரபு மீறி ஆளுநர் செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் நீதிபதி
எச். ராஜா பேசுவது குறித்து வேடிக்கை பார்க்காமல் அவரை உடனே அரசு கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பேராசிரியை விவகாரத்தில் பெண் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.