டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்கள்.. நியமித்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சியில் உரிய விதிமுறைப்படி உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்று கூறி திமுக, பாமக, மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், டிஎன்பிஎஸ்சியின் 11 உறுப்பினர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுகளாக உறுப்பினர் இல்லாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இயங்கி வந்தது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராஜராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன், சுப்பையா, மற்றும் பாலுசாமி ஆகிய ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்துள்ளார்.