உரிமையை கொடுக்காவிட்டால் இந்தியாவில் இருந்து சட்டரீதியாக பிரிவோம் - கொந்தளித்த கவுதமன்
எங்களின் உரிமையை கொடுங்க... இல்லாட்டி நாங்க சட்டரீதியாக இந்தியாவில் இருந்து பிரிய ரெடி என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்குத் தேவையான உரிமையை பல ஆண்டுகாலமாக கேட்டு வருகிறோம். ஆனால் மத்திய அரசு அதைத்தராமல் நசுக்கப் பார்க்கிறது. எங்களின் உரிமைகளைத் தராமல் நசுக்கினால் நாங்கள் சட்டரீதியாக பிரிய ரெடி என்று கத்திப்பாராவில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக போராடி வருகின்றனர். உச்சக்கட்டமாக நிர்வாண போராட்டம் கூட நடத்தி விட்டனர்.
வறட்சி நிவாரண நிதி அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மத்திய வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
கடன் தள்ளுபடி பற்றி அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சந்தித்தால் மட்டுமே டெல்லியில் இருந்து கிளம்புவோம் என்றும் கூறி போராடி வருகின்றனர்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் அமைப்பினர் திடீரென போராடினர். கிண்டியில் உள்ள கத்திப்பாரா பாலத்திற்கு திடீரென பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் போராட்டம்
திடீர் போராட்டத்தினால் சென்னையே ஸ்தம்பித்தது. மிக முக்கிய மேம்பாலமான கத்திப்பாரா மேம்பாலாத்தில் எந்தப்பக்கமும் வாகனங்கள் நகரமுடியாமல் தடுமாறின. விமான நிலையம் செல்பவர்களும், பணிக்கு செல்பவர்களும் செய்வதறியாது திகைத்தனர். கம்பியை அறுத்த போலீஸ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர்.
இயக்குநர் கவுதமன்
செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன், அன்று தேசத்தின் தந்தை அரை நிர்வாணமாக நின்றார் இந்த உலகமே கையெடுத்து கும்பிட்டது. தமிழக விவசாயிகள் அரை நிர்வாணமாக போராடி வருகின்றனர். நிர்வாணமாகவும் போராடி விட்டனர் என்றார்.
விவசாயிகள் மரணம்
350 விவசாயிகள் மாண்டு விட்டனர்.என் தாய் சோறிடுகிறாள். அதற்கு அரிசி தரும் தாய் விவசாயிகள். விவசாயிகள் மரணத்திற்கு எந்த பதிலும் இல்லை, இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயமும், விவசாயிகளும்தான் என்று காந்தி சொன்னார். எங்களின் விவசாய நிலம் இறந்து போகும். தமிழகர்களும் மாண்டு போவார்கள்.
அழிக்க நினைப்பதா?
விவசாயிகளை அழித்து விட்டு தமிழ் இனத்தை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் பிரதமர் மோடி, அது மோடியால் ஒரு போதும் முடியாது
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், மீனவர்கள் பிரச்சினை தீர்க்க வேண்டும். கச்சத்தீவை எங்களுடையதாக ஆக்க வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் செத்தாலும் பராவாயில்லை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார்.
சாகும் வரை போராடுவோம்
தமிழகத்தில் ஒரு ரயிலை ஓட விடமாட்டோம், மத்திய அரசு நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம். மத்திய அரசை மொத்தமாக முடக்குவோம். நாங்கள் செத்தாலும் விவசாயிகளின் மானம் காக்க போராடுவோம்.
தமிழகம் பிரிய தயார்
எங்கள் விவசாயிகளை சந்திக்கவில்லை, எதற்காக இந்த தேசம்,. எங்களுடைய, இது எங்கள் மண் , இது எங்கள் வானம், எங்களின் உரிமையை கேட்கிறோம். எங்களின் உரிமை பறிக்க நினைத்தால் சட்டப்படி நாங்கள் பிரிய ரெடியாக இருக்கிறோம்.
நசுக்க விடமாட்டோம்
50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது தமிழ், 2 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது இந்தி, இந்திக்காரர்கள் எங்கள் தமிழகத்தை நசுக்கமுடியாது
இது உரிமைப் போராட்டம் தமிழரை நசுக்கினால் தனிநாடாக சட்டரீதியாக நாங்கள் பிரிந்து செல்கிறோம் என்றும் கொந்தளித்தார் வ. கவுதமன்.