குண்டர் சட்டத் திருத்தம் அரசியல் ரீதியாக பழிவாங்கவே பயன்படும்... கருணாநிதி கடும் எதிர்ப்பு!
சென்னை: அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில், எதிர்க்கட்சியினரை கைது செய்யக்கூடிய வகையில் குண்டர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
குண்டர் சட்டம்...
அ.தி.மு.க. அரசு சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத் தொடரின் இறுதி நாளான 12-8-2014 அன்று 19 சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக முன்மொழிந்து விரிவாகவும், விளக்கமாகவும் விவாதிப்பதற்குக்கூட நேரம் தராமல் அவையிலே நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த மசோதாக்களில் ஒன்று; கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்துபவர்கள், காணொலித் திருடர்கள் முதல் முறை குற்றம் புரியும் போதே, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்து இயற்றப்பட்ட மசோதாவாகும்.
காரணம்...
ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, இத்தகைய கொடுங்குற்றம் செய்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வழி உள்ளது. தற்போது இந்த அரசு செய்கின்ற திருத்தம், இந்தச் சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்கள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதற்குப் பதிலாக ஒரு முறை குற்றம் செய்தாலும், அது சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியதாக இருக்கிறது என்ற காரணத்தால், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வழிவகை செய்துகொள்கிறார்கள்.
ஓர் ஆண்டுச் சிறை...
இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், ஓராண்டு காலத்திற்கு எந்த விசாரணையும் இல்லாமலேயே சிறையிலே அடைக்கப்படலாம் எனும் அளவுக்கு வெள்ளை ஏகாதிபத்தியத்தை நினைவூட்டும் சட்டம் இது. இந்த ஆட்சியில் இதுவரை இந்த குண்டர்கள் சட்டம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். குறிப்பாக நீதிமன்றத்திலே இந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது நீதிபதிகள் என்ன தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்பதையும் நினைவிலே கொள்வது நல்லது.
பழி வாக்கும் காட்டு தர்பார்...
இதுபோன்றதொரு சட்டப் பிரிவு இல்லாத நேரத்திலேயே அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே தி.மு.க. முன்னணியினர் நாட்டில் நடமாடவே கூடாது என்ற தீய நோக்கத்தோடு, ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களிலேயே தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் ஜாமீனில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும், மீண்டும் அவர்கள் மீது ஏதேதோ பொய்ப் புகார்களைப் பெற்று வேண்டுமென்றே வழக்கு தொடுத்தும், அதிலும் நீதிமன்றத்தை அணுகி சட்ட விதிமுறைகளின்படி ஜாமீன் பெற்றால் அவர்களில் சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பிறப்பித்து விசாரணையே இன்றிச் சிறையிலே அடைத்தும் தொடர்ந்து நடந்து வந்த பிறகு வேறு வழியில்லாமல் அத்தகைய பழி வாங்கும் காட்டு தர்பார் போக்கினைக் கண்டிக்கும் வகையிலே மாத்திரமல்லாமல், அத்துடன் மக்கள் பிரச்சினை களையும் இணைத்து கழகத் தலைமைச் செயற்குழுவினைக் கூட்டி அதிலே ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதற்குப் பிறகுதான் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டு முறைப்படி நடைபெற்றது.
வழக்குகள்...
குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்குகள் நிலுவையிலே இருந்ததையொட்டி, அந்த வழக்குகளை விரைந்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அக்னிஹோத்ரி உத்தரவிட்டார்.
தனி டிவிஷன் பெஞ்ச்...
அந்த அடிப்படையில் இந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு தனி டிவிஷன் பெஞ்ச் ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர் 14-6-2014 அன்று இத்தகைய வழக்குகளை விசாரித்தனர். நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கி, மதியம் 2 மணிக்குள் 220 வழக்குகளை விசாரித்து 212 வழக்குகளில் தீர்ப்பு கூறினார்கள். அதன்படி இந்த 212 வழக்குகளில் உள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தீய நோக்கோடு திருத்தம்...
அ.தி.மு.க. அரசு, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்பதைப் போல, இந்தச் சட்டத்தை மேலும் கடுமையாகவும், கொடுமையானதுமாக மாற்றி, இதுவரை தொடர்ந்து இத்தகைய குற்றம் செய்தவர்களைத்தான் கைது செய்ய முடியும் என்ற நிலையைத் தளர்த்தி, ஒரே முறை தவறு செய்தாலே போதும், கைது செய்யலாம் என்ற அளவுக்கு, பெரும் தீய உள்நோக்கத்தோடு, திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தாங்கள் நினைத்தபடி, அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில், எதிர்க்கட்சியினரை கைது செய்யக்கூடிய வகையில் மிகவும் ஆபத்தான இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்து பேரவையில் நிறைவேற்றியிருப்பது, ஜனநாயகம் உயிர்த்தெழ முடியாமல் ஆழக்குழி தோண்டி புதைக்கும் முயற்சி என்று கழகத்தின் சார்பில் அறிவிக்கின்றேன்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.