குட்கா விவகாரம்... தலைமை செயலகத்தில் சட்டசபை உரிமை குழு கூட்டம் தொடங்கியது
திமுக எம்எல்ஏ-க்கள் குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபை உரிமை குழுக் கூட்டம் கூடுகிறது.
சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை திமுக எம்எல்ஏ-க்கள் சட்டசபைக்கு கொண்டு வந்ததாக அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த உரிமை குழு கூட்டம் தொடங்கியது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு கொண்டு சென்றனர்.

தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சட்டசபை உரிமை மீறல் குழு கூட்டம் தொடங்கியது. இதற்காக திமுக எம்எல்ஏ-க்கள் சுந்தர், மதிவாணன், பெரியகருப்பன், ரகுபதி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கொறடா விஜயதாரணியும் தலைமை செயலகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், கீதா, பரமேஸ்வரி, மருதுமுத்து, ராமலிங்கம் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு உள்ளதால் அவர் அழைக்கப்படவில்லை. தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களான ஏழுமலை, தங்கதுரை, ஜக்கையன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மொத்தம் 17 பேரில் 4 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications