ராகுல் காந்திக்கு போட்டியாக லிஸ்டு போட்ட எச்.ராஜா... என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
காரைக்குடி: இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல் விலையை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டும், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட வேலை குறித்தும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பட்டியலிட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்தியாவை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளராக இருந்தவர் எச்.ராஜா. சர்ச்சையான பேச்சுகள், சமூக வலைதள பதிவுகளின் மூலமாக புகழ்பெற்றவர்.
இவரது கருத்துக்கள் எப்போதும் தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதப்பொருளாகி வருகின்றன.

எச்.ராஜாவின் கருத்துக்கள்
தந்தை பெரியார் குறித்தும், உயர்நீதிமன்றம் குறித்தும், கவிஞர் வைரமுத்து குறித்தும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பற்றியும் இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்காக வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறார் எச்.ராஜா
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்டை நாடுகளில் உள்ள பெட்ரோல் டீசல் விலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பெட்ரோல் விலை பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி
அதில் "ஆப்கானிஸ்தான்: ரூ.66.99, பாகிஸ்தான்: ரூ.62.38, இலங்கை: ரூ.72.96, வங்கதேசம்: ரூ.78.53, பூடான்: ரூ.86.28, நேபாளம்: ரூ.97.05, இந்தியா: ரூ.101.81. ஃபகீரிடம் கேள்விகளை கேட்காதீர்கள். கேமராக்களின் மூலம் அறிவை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் மூட்டை நிறைய ஜூம்லாக்களுடன் வந்து இந்தியாவை கொள்ளையடித்தார்." என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மோடி குறித்து ராகுல் வெளியிட்ட பட்டியல்
அதேபோல் ""பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எவ்வளவு ரூபாய் ஏற்ற வேண்டும்? எப்படி மக்களின் விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தை நிறுத்துவது? எப்படி வேலை வாய்ப்பு குறித்த வெற்று கனவுகளை இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்? இன்று எந்த அரசு பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்வது? விவசாயிகளை ஆதரவற்ற நிலைக்கு எப்படி தள்ளுவது?" ஆகிய 5 வேலைகளைதான் பிரதமர் மோடி தினசரி செய்து வருவதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்" என ராகுல் காந்தி பட்டியலிட்டு இருந்தார்.

எச்.ராஜா வெளியிட்ட பட்டியல்
இதே பாணியில் எச்.ராஜா பேஸ்புக்கில் ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார். அதில், "1.பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது, 2.இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது. 3.மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 4. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி. 5. சீனாவில் ஒரு கட்சி ஆட்சி, 6. ரஷியாவில் தனிநபர் ஆட்சி, 7. இந்தியர்கள் மட்டும் ஐ.பி.எல். போட்டிகளை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் சிலர் தங்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்று கருதுகின்றனர்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications