சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் சேகர் வீட்டை பார்த்திருக்கிறீர்களா?
சென்னை: சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டு மாடியில் தினமும் ஏராளமான கிளிகளை பார்க்க முடிகிறது.
சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வசித்து வருபவர் சி.சேகர். இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிட்ட சேகர் தற்போது பல வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கிளிகளை பார்ப்பதே அரிதாகிவிட்ட நிலையில் சேகர் வீட்டு மாடியில் கிளிகள் கூட்டம் கூட்டமாக இருப்பதை பார்த்தால் அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது.
இது குறித்து சேகர் கூறுகையில்,
சுனாமி
நான் ஒரு கேமரா டெக்னீஷியன். என் வீடு இருக்கும் இதே கட்டிடத்தில் தான் என் அலுவலகமும் உள்ளது. நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். கடந்த 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது பல கிராமங்கள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு வசித்த விலங்குகள் பாதிக்கப்பட்டன.
கிளிகள்
அப்போது தான் என் வீட்டு மாடியில் இரண்டு கிளிகள் பறக்க முடியாமல் நின்றன. நான் அவைகளுக்கு உணவும், நீரும் அளித்தேன். அதில் இருந்து அந்த கிளிகள் என் வீட்டுக்கு தினமும் வந்தன. நாளடைவில் அந்த 2 கிளிகளுடன் ஏராளமான கிளிகள் வரத் துவங்கின.
அரிசி
கிளிகளுக்கு கொடுக்க தினமும் நான் 30 கிலோ அரிசி வாங்குகிறேன். அவைகளின் உணவுக்காக நான் தினமும் ரூ.1000 செலவு செய்கிறேன். கிளிகளை யாரும் காயப்பட்டுத்தாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.
எங்கிருந்து?
இவ்வளவு கிளிகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்கு தெரியவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு உணவளிப்பதை யாராவது கேள்வி கேட்பார்களா, இல்லை அல்லவா. அப்படி இருக்கையில் கிளிகளுக்கு உணவளிப்பதை மட்டும் ஏன் மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்றார் சேகர்.