கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் மீதான குண்டர் சட்டம் ரத்து
சென்னை: தலில் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் யுவராஜ் மீதான குண்டர் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜ், கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று, திருச்செங்கோடு அருகே அவர் சடலமாக மீட்கப்பட்டார். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தீரன் சின்னமலை அமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமறைவானார். இதனிடையே, இந்த கோகுல்ராஜ் வழக்கின் விசாரணையை நடத்திவந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா தற்கொலை செய்துகொண்டார்.
அந்த சமயத்தில் யுவராஜ் வெளியிட்ட சில ஆடியோ வெளியீடுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து, அவர் மீதான தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நாமக்கல் சிபிசிஐடி காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி யுவராஜ் சரணடைந்தார்
யுவராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து யுவராஜின் மனைவி சுமிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் நாகமுத்து தலைமையிலான அமர்வு, யுவராஜ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.மேலும், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளது.