வெளுத்துக்கட்டும் மழை - திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழி ஆகிய ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் மழையால் பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்வதற்காக சனிக்கிழமையன்று பள்ளிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்வதால் நாளைய தினம் நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.