வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய திண்டுக்கல் பகுதியில் 2-வது நாளாக மழை- மக்கள் ஆனந்த கண்ணீர்!
வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை தொடருவது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
திண்டுக்கல்: உச்சகட்ட வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல மழை பெய்து வருவது திண்டுக்கல் மாவட்ட மக்களை ஆனந்த கண்ணீர் விட வைத்துள்ளது.
தமிழகத்தின் மிகவும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை எட்டியே பார்க்காமல் போனது.
வறட்சியின் உச்சம்
இதனால் ஒட்டுமொத்தமாக விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. தென்னை மரங்கள் காய்ந்து கருகிப் போயின. மரங்களும் வயல்வெளிகளும் இல்லாமல் போனதால் அனைத்தும் பொட்டல்காடுகளாகிப் போகின. விளைநிலங்கள் வெடிப்பு கண்டன.
எட்டிப்பார்த்த கனமழை
இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லை எட்டிப்பார்த்தது கனமழை. சுமார் 2 மணிநேரம் இடி மின்னல் இல்லாமல் அமைதியாக கொட்டிய இந்த மழை மக்களை ஆனந்த கண்ணீர் விடவைத்தது.
சமூக வலைதளங்களில்...
தங்களது பகுதியில் மழை பெய்வதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர் திண்டுக்கல் மாவட்ட மக்கள். மழைகாட்சிகளை லைவ்வாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்தும் மகிழ்ந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
வெளிநாடுகளில் இருப்போரும்கூட உறவினர்களை தொலைபேசியில் அழைத்து நம்ம ஊரில் மழை பெய்ததாமே என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இன்றும் 2-வது நாளாக இரவு 7 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ந்து போயுள்ளனர். இப்படியே தொடர்ச்சியாக மழை பெய்தால் சற்றே நிலத்தடி நீர் உயர்ந்து பொய்த்து போன விவசாயம் உயிர்பெற்றுவிடும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.