கனமழை... பாதிப்பிலிருந்து விவசாயிகளை அதிமுக அரசு மீட்க வேண்டும்: ஸ்டாலின்
சென்னை: கனமழை பாதிப்பில் இருந்து விவசாயிகளை அதிமுக அரசு மீட்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பருவம் தவறிப் பெய்த கன மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உயிரிழப்புகளும், விவசாயப் பயிர்களுக்கு கடும் பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. கனமழைக்கு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். 4-வது நாளாக தொடர்ந்து பெய்யும் மழையால் காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வருகிறது. குறிப்பாக பருத்தி மற்றும் உளுந்து பயிர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. இதுதவிர, விருதுநகர் வத்ராயிருப்புப் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று ‘திடீர்' வெள்ளத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளார்கள். 200-க்கும் மேற்பட்டோர் வெள்ள பகுதிகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கனமழை மற்றும் சாரல் மழையால் ஏற்பட்ட மேற்கண்ட பாதிப்புகள் திடீரென்று ஏற்படும் பருவகால மாற்றங்களை சந்திக்கக்கூடிய முன்னேற்பாடுகள் ஏதுமின்றி இந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆகவே, இதுபோன்ற ‘திடீர்' வெள்ளங்களை, கனமழையை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க. அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் உள்ள காப்பீடு திட்டங்களில் முழுக்கவனம் செலுத்தி, விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்பிலிருந்து அவர்களை உடனடியாக அ.தி.மு.க. அரசு மீட்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.