முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைக்க கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் மதுக்கடைகளை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் மதுபான கடையை அமைக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் அடுத்து தமிழக நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன.
இதனால் டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் ஊருக்குள் கடையை கொண்டு வர இடம் பார்த்து வருகின்றனர் ஊழியர்கள். இதற்கு பொதுமக்கள், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தங்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற ஆங்காங்கே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் கோவை அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் முதியோர் இல்லம் அருகே டாஸ்மாக் மதுக்கடைகள் அமைப்பதை தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, தமிழகத்தில் முதியோர் இல்லம் அமைந்துள்ள பகுதி அருகே டாஸ்மாக் மதுக்கடைகளை அமைக்க தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வலிபாட்டு தலம், கல்வி நிறுவனங்கள் அருகிலும் டாஸ்மாக கடைகளை அமைக்க கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.