உரிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதா? ஆய்வு செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை மாநகரில் எந்தெந்த இடங்களில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகள், மருத்துவமணைகள் அருகாமையில் வேகத்தடையை ஏற்படுத்த வேண்டும். இவை விதிமுறைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்தியன் சாலை காங்கிரஸ் விதிமுறைப்படி வேகத்தடை எங்கெங்கு பொருத்தப்பட வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
இதன் படி 'டி' (T) வடிவிலான சிறிய சாலைகளும், மாநில, தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் பகுதியிலும், நகரத்தில் பிரதான சாலைகளை இணைக்கும் சிறிய சாலைகள் இருக்கும் பகுதியிலும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் அதிகம் வசிக்கும் வசிப்பிடங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்கள் அருகாமையில் அமைக்கப்பட வேண்டும்.
பலவீனமான் பாலங்கள், பார்க்க முடியாத கூரான வளைவுகளில் ஆகிய இடங்களிலும் வேகத் தடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த விதியில் கூறப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. ஆனால், இவை நடைமுறையில் இல்லை. சென்னை மாநகரை ஒருவர் சுற்றி பார்க்கும் போது தான் இது தொடர்பான உண்மை நிலை வேறு என்பது தெரியும்.
எனவே, முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி ஆணையர் சென்னையில் வேகத்தடை தொடர்பாக கணக்கெடுத்து, பின் எந்தெந்த இடத்திற்கு வேகத்தடை வேண்டும் என்பதை ஆய்வு செய்து, அவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.