மவுலிவாக்கம் கட்டிட விபத்து அறிக்கை தாக்கல் எப்போது?- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு வரும் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 60 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்திற்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விபத்து வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த விபத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ததாகவும், விரைவில் அந்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இதுவரை நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் விபத்து குறித்த அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை. கடந்த அக்டோபர் 2014ல் இருந்து இதுவரை 5 முறை சட்டமன்றம் கூடியிருக்கின்றது.
ஆனால் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்கப் போரீர்களா இல்லையா. அறிக்கையை வைப்பதாக இருந்தால் எப்போது வைக்கப் போகிறீர்கள். எப்போது சட்டமன்றம் நடைபெற உள்ளது அதற்கான தேதிகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications