கொடைக்கானல், பாம்பாறு, பெரியகுளம் கண்மாய் மீன்களில் பாதரசம்... பகீர் தகவல்
மதுரை: கொடைக்கானல், பாம்பாறு, பெரியகுளம் கண்மாய் மீன்களில் பாதரசம் கலந்திருப்பதாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில செயலாளர் முரளி, கொடைக்கானல் பாதரச மாசை அகற்றும் பிரசார இயக்க நிர்வாகி நித்யானந்தன் ஜெயராமன் ஆகியோர் கூறியதாவது:

கொடைக்கானலில் செயல்பட்ட யூனிலிவர் நிறுவனத்தினர் தெர்மா மீட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பாதரச கழிவுகளை அகற்றவில்லை. இதன் பாதிப்பு தொடர்பாக ஹைதராபாத் ஐஐடியின் பேராசிரியர் அசிப் குவார்ச்சி ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வில் கொடைக்கானல் ஏரி, பாம்பாறு மற்றும் பெரியகுளம் கண்மாய் போன்றவற்றில் மிகமிக அதிகமாக பாதரசக் கழிவு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானல் ஏரி, பாம்பாறு, பெரியகுளம் கண்மாய் மீன்களை அப்பகுதி மக்கள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு நிர்வாகங்கள் இதை செய்யவில்லை. ஆகையால் நாங்களே இதனை அறிவிக்கிறோம்.
பாதரசக் கழிவுகள் என்பது நமது நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையையும் சேதப்படுத்தக்கூடியது. சிறுநீரகத்தையும் பாதிக்கும். கர்ப்பிணிகள் சாப்பிட நேர்ந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் இது பாதிக்கும்.
இவ்வாறு முரளி, நித்யானந்த் ஜெயராமன் கூறினர்.












Click it and Unblock the Notifications