ஆர்.கே.நகர் கோதாவில் இந்து மக்கள் கட்சியும் குதித்தது.. தனித்து போட்டி என்கிறார் அர்ஜூன் சம்பத்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
சிவகாசி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்காமல் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 6 முனை போட்டி நிலவி வருகிறது. இந்தத் தேர்தலை கௌரவப் பிரச்சினையாகவே சில கட்சிகள் கருதுகின்றன.
பொதுவாக தேர்தல்களில் எதிரெதிர் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவக் கூடும். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் இந்த இடைத்தேர்தலில் அந்த கட்சிகளுக்குள்ளேயே போட்டி நிலவுகிறது.
அந்த வகையில் சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனுக்கும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்த தேர்தலில் எப்படியாயினும் வென்று விட வேண்டும் என்று திமுகவும் துடிக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியன போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. ஆர்.கே. நகர் தேர்தலில் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று சிவகாசியில் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.