வறண்ட வானிலைதான்... ஆனாலும் இடியுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னதாகவே தமிழகத்தில் அனலடிக்க ஆரம்பித்து விட்டது. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலுக்கு ஆறுதலாக சற்றே ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை நனைக்கிறது.
காலை 10 மணிக்கே கொளுத்தும் வெயில் நேரம் செல்லச் செல்ல அனலை கக்குவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர். சாலைகளில் கானல் நீரோடுவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கொதிக்கும் வெயிலுக்கு இதமாக சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் என்று வானிலை ஆய்வு மையம் சற்றே ஆறுதலான தகவலை கூறியுள்ளது.
கொளுத்தும் வெயில்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் வெயில் கொளுத்துகிறது. டிசம்பரில் பெய்த கனமழையின் சுவடே தெரியாத அளவுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைதூக்கியுள்ளது.
வெப்பச்சலனம்
வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தில் ஆங்காங்கே சில நாட்களாக மிதமான மழை பெய்தது. மதுரை, தேனியில் இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. எனினும் கோடை வெப்பத்தை தணிக்கவில்லை.
104 டிகிரி வெயில்
ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களிலும் நேற்று மிதமான மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி வெப்ப நிலை நேற்று பதிவானது. வேலூர் , சேலம், கரூர், திருவண்ணாமலையில் 103 டிகிரியும், தர்மபுரி, நெல்லை, மதுரையில் 102 டிகிரியும், கோவையில் 100 டிகிரியும் பதிவானது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். வெயில் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள் மாவட்டங்களில் மழை
வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், நீலகிரி, கோவை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில், இன்றும், 16ம் தேதியும், மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வறண்ட வானிலை
வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், வறண்ட வானிலை நிலவும். நாளையும், நாளை மறுதினமும் (ஏப்ரல் 14, 15) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெயிலுக்கு இதமாய் தூறலாவது பெய்தால் சரிதான்.