இப்படியே எவ்வளவு நாளைக்குப் பொழப்பை ஓட்ட முடியும்...??
சென்னை: முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்தது முதல் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து, பம்மிப் பம்மிச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் எத்தனை காலத்துக்கு இவர் இப்படி செயல்படுவார் என்று மக்கள் ஆச்சரியம் கலந்த குழப்பத்துடன் உள்ளனர்.
பண்டிகைகளுக்கு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருப்பவர் வாழ்த்து சொல்வது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் அதைக் கூட செய்ய மறக்கிறார், மறுக்கிறார் முதல்வர் பன்னீர் செல்வம்.

தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் மக்களை அவர் வாழ்த்தவில்லை. இது தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாகும்.
ஜெயலலிதா வீட்டோடு முடங்கிக் கிடக்கும் நிலையில் என்னத்த வாழ்த்தி என்னத்த ஆகப் போகிறது என்ற விரக்தி மனப்பான்மையில் அவர் இருக்கலாம். ஆனால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அவர் மறந்து விட்டார். அவரது மனதில் மக்களின் முதல்வர் இப்படி முடங்கிப் போய்க் கிடக்கிறாரே என்ற விசனம் மட்டுமே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
முதல்வர் என்ற அதிகாரத்தில் தான் வாழ்த்து தெரிவித்தால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்பதுதான் அவரது பயம் என்று கூறுகிறார்கள். இதனால்தான் அவர் வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கிறாராம். ஆனால் ஜெயலலிதாவும் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பதால் ஆட்சியும் சரி, ஆளுங்கட்சியும் சரி சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்த மறந்த நிலை ஏற்பட்டு விட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கிறிஸ்தவர்களை ஐஸ் வைக்கும் வகையில் பல காரியங்களைச் செய்தார் ஜெயலலிதா. கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் விழாவில் கூட கலந்து கொண்டார். கிறிஸ்தவர்களுக்காக பல சலுகைகளையும் அறிவித்தார். ஆட்சிக்கு வந்த பிறகும் கூட ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார். தான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்ததை பெருமையாகவும் சொல்லி வந்தார்.
ஆனால் இந்த ஆண்டு அவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லவில்லை. அவரது ஆட்சியும் கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களை வாழ்த்தவில்லை. கிறிஸ்துமஸ் விழாவையும் அதிமுக கொண்டாடவில்லை.
இதேபோல எம்.ஜி.ஆர். நினைவு நாளுக்குக் கூட ஜெயலலிதா அவரது நினைவிடத்திற்குப் போகவில்லை. கட்சியின் பொதுக்குழுவையும் கூட்டவில்லை. ஒரே சோகமாக இருக்கிறது அதிமுக வட்டாரமும், ஆட்சியும்.
இப்படியே எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை, புரியவில்லை.












Click it and Unblock the Notifications