கேரளாவில் பெண் குழந்தை வக்கிரக்காரர்கள் நடத்திய டெலிகிராம் குரூப்.. சிக்க வைத்த 'ஓன்இந்தியா'
சென்னை: கேரளாவில் குழந்தை பாலியல் சுரண்டல் நபர்கள் நடத்திவந்த ரகசிய 'டெலிகிராம்' குரூப்பை ரகசிய ஆபரேஷன் நடத்தி, காவல்துறைக்கு காட்டிக் கொடுத்து அதை நடத்தி வந்த 'அட்மின்' கைது செய்யப்பட 'ஒன்இந்தியா' உதவியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஜலித் தொட்டோலி என்பவர் நமக்கு ஒரு திடுக்கிடும் தகவலை சமீபத்தில் அளித்தார். எம்எல்பிஎம் ('MLPM') என்ற பெயருள்ள அட்மின் சிறுமிகள் சார்ந்த பாலியல் டெலிகிராம் குரூப் நடத்துவதாக அவர் கூறினார்.
இதையடுத்து, அந்த குரூப்பை அம்பலப்படுத்தி, அட்மினை சட்டத்தின் முன் நிறுத்த 'ஒன்இந்தியா' முடிவு செய்து, கேரளாவை சேர்ந்த நமது பத்திரிகையாளர் ஒருவரை இதற்காக களமிறக்கியது.

குரூப்பில் இணைந்த உளவாளி
நமது பத்திரிகையாளர் அந்த குரூப்பில் சேர்ந்து அங்கே நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயல்களை கண்டுபிடிக்கும் தொடர் முயற்சிகளில் இறங்கினார். நீண்ட நாட்கள் முயன்ற பிறகு, குரூப் அட்மின் நம்பிக்கையை பெற்று, அதில் இவரும் இணைக்கப்பட்டார். கடந்த வருடம் நவம்பர் 22ம் தேதி, 'பூமபட்டா' என்ற பெயரில் சிறுமிகளுக்கான பாலியல் 'மனநோயாளிகள்' குரூப் தொடங்கப்பட்டது. அதே நாளில், கேரள கிரைம் பிராஞ்ச் ஐஜிபியிடம் இதுகுறித்து நமது பத்திரிகையாளர் புகார் பதிவு செய்துவிட்டார். அந்த குரூப்பில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து வரும் தகவலையும் காவல்துறையிடம் நமது பத்திரிகையாளர் தெரியப்படுத்தினார்.

பெரும் கொடுமை
இந்த குரூப்பில் 1 வயது முதலான சிறுமிகள் படங்களும், வீடியோக்களும் இடம்பெற்றன. பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள், போட்டோக்களும் பகிரப்பட்டுக்கொண்டே இருந்தன. ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் விளையாடும் சிறுமிகளின் புகைப்படங்களை ரகசியமாக செல்போனில் எடுத்து அதை இந்த குரூப்பில் போட்டு மோசமான வார்த்தைகளால் அந்த பச்சிளம் சிறுமிகளை வர்ணிக்கும் வேலையும் இந்த குரூப்பில் நடந்தது.

செல்போன் எண் கண்டுபிடிப்பு
சுமார் 350 உறுப்பினர்கள் அந்த குரூப்பில் இருந்தனர். வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த பல மலையாளிகள் இதில் உறுப்பினர்களாகும். டெலிகிராமில் செல்போன் எண் காண்பிக்காது என்பது இந்த கிரிமினல்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், நமது பத்திரிகையாளர் அந்த குரூப் அட்மினின் நம்பிக்கையை பெற்று அவரின் போன் எண்ணை வாங்கிக்கொண்டார். உடனடியாக அந்த செல்போன் எண்ணை காவல்துறையிடமும் பகிர்ந்துகொண்டார்.

சபாஷ் போலீஸ்
இதையடுத்து, போலீசார் துரிதமாக செயல்பட்டு, குரூப் அட்மினை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர், ஷாரப் அலி என்பது தெரியவந்தது. மலப்புரம் மாவட்டத்தின் வண்டூர் என்ற பகுதியை சேர்தவர் இவர். மனைவியை மாற்றிக்கொள்வது, ஓரின சேர்க்கை போன்ற பல்வேறு பெயர்களில், மேலும் 4 டெலிகிராம் குரூப்பையும் இவர் நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அந்தந்த விஷயங்களில் நாட்டம் உள்ளவர்கள் அந்ந்த குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை பாராட்டு
ஷாரப் அலி மீது, குழந்தைகளை பாலியல் ஆபத்திலிருந்து காக்கும் POCSO சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 15ன் கீழும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், பிரிவு 67 பி (ஏபி)யின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் சாகசங்களை போல, குற்றவாளிகளை பிடிக்க உளவாளி போல செயல்பட்ட நமது பத்திரிகையாளருக்கு, கேரள காவல்துறை தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications