விவசாயிகள் பிரச்சனைக்கு வெறும் பச்சாதாபம் எதற்கு? நகர்ப்புற மக்களும் உதவலாமே!
அடுத்த வாரம் தமிழர் திருநாள் பொங்கல் விழா. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி. இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட ஊருக்குப் போகலாம் என்று எண்ணியிருந்தேன். 'நெல் விவசாயம் இல்லைண்ணா' என்று தம்பி சொன்னதால், எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
ஊரெங்கும் பச்சைப் பசேல் என்று இருக்கும் காலம் இது. ஆனால் வாழைக்கும் போர்வெல் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையாம். எனக்குத் தெரிந்து இரண்டு போகம் விளைந்த பூமி. முதன் முதலாக ஒரு போகத்திற்கே வழி இல்லாத நிலை.
18 வயதில் விவசாயத்தை தனது வாழ்க்கையாக்கிக் கொண்ட என் தந்தையை நினைத்துப் பார்க்கிறேன். 73 வயது வரையிலும் நெல் உளுந்து வாழை என்று விவசாயத்தை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். 55 ஆண்டுகாலம் அவருடைய விவசாயத்தில் ஏற்றங்களும் உண்டு, கடன் தொல்லைகளும் உண்டு.
ஆனால் ஒரு நாளும் பிள்ளைகளிடம் கடன் இருக்குப்பா என்று சொன்னதில்லை, உதவி
கேட்டதில்லை.. நாங்களாக துளைத்துக் கேட்டால் இவ்வளவு இருக்கு, அடுத்த மகசூலில் அடைத்து விடுவேன் என்பார். அவருடைய நிதி மேலாண்மை பற்றி தனியாகவே எழுதலாம்.
ஒரு தடவை, இருக்கும் கடனை எல்லாம் அடைத்து விடுகிறேன். நீங்கள் இனி விவசாயம் பார்க்க வேண்டாம். ஓய்வெடுங்கள் என்றேன். அந்த பணத்தைக் கொடு உன் பெயரில் இன்னும் நிலம் வாங்கிப்போடுகிறேன் என்று பேச்சை திசை திருப்பினாரே ஒழிய, என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதே சமயம் உழவுக்கு, உரம் வாங்க, வேலை ஆட்களுக்கு என்று கொடுத்தால் மறுக்க மாட்டார்.
உன்னுடைய பங்கும் விவசாயத்தில் இருக்கட்டும் என்று ஏற்றுக்கொள்வார்.
லட்சோப லட்ச விவசாயிகளில் என் தந்தையும் ஒருவர் . எந்த ஒரு விவசாயியும் தனது பிள்ளைகளிடம் கூட எதையும் எதிர்ப்பார்த்து நிற்பதில்லை. தங்களால் முடியும் என்று இறுதி வரையிலும் நம்புபவர்கள்.
கருகும் பயிர்களைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தாங்க முடியாத துன்பத்தை ஒரு விதத்தில், மாரடைப்பு முடித்து வைக்கிறது. தன்னையே மாய்த்துக் கொள்பவர்கள் கூட, தனது பிரச்சனைகள் குழந்தைகள் உட்பட அடுத்தவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற சிந்தனையில் தான் அப்படிச் செய்திருப்பார்கள்.
அவர்களது எண்ணத்தை எப்படி மாற்றுவது என்று அருகில் இருப்பவர்கள் முயற்சிக்க வேண்டும்.
பணம் கொடுத்தால் கடனை அடைத்து விட்டு விவசாயி நிம்மதியாக இருப்பார் என்று நினைத்தால் அது உண்மையில்லை. கடனும் ஒரு பிரச்சனை என்பதுதானே உண்மை.
கடன் தள்ளுபடி, உடனடி நிவாரணம் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. அதை உடனடியாக செய்தாகவேண்டும். செத்துக் கொண்டிருப்பவரை காப்பாற்றுவதற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் போன்றதுதான் கடன் தள்ளுபடி. தாமதிக்கமால் உடனடியாக அரசு அதை செய்ய வேண்டும்.
'தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது' என்று நம்பிக்கை தளர்ந்த சூழ்நிலைதான் சோக முடிவுகளுக்கு காரணம். விவசாயத் தொழில் மீது விவசாயிகளுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட வைக்க வேண்டும்.
அதற்கு நகர்ப்புற மக்களும் மனது வைக்க வேண்டும். மாதத்தில் ஒரு நாள் ஒரு கிராமத்திற்குப் போங்க. அங்குள்ள விவசாயிகளிடம் பேசுங்க.. உங்களுக்கே பல உண்மைகள் தெரிய வரும்.
உங்களால் என்ன பங்களிப்பு செய்ய முடியும் என்று நீங்களே உணர்வீர்கள். கோவை நகரில் வசித்து வந்த பள்ளி ஆசிரியை எம் ரேவதி, 'பசுமைப் போராளி'யாக மாறியதற்கு முதல்படி அவருடைய ஒரு நாள் கிராமத்துப் பயணம்தான்.
-இர தினகர்