நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய முழு விவரம்.. சந்தேகங்களும், பதில்களும் இதோ
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும், பதில்களும் இதோ உங்களது பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்எல்ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.
அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
இதையடுத்து, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார். இது ரகசிய வாக்கெடுப்பாக இருக்குமா அல்லது, வெளிப்படையானதாக இருக்குமா என்பதை சபாநாயகரே நாளை முடிவு செய்வார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்:

நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?
ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஓர் அரசை யார் கோர முடியும்?
ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி, சட்டசபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருினால், அதன் அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.

நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.
சுயேட்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றால், கொறடா உத்தரவுப்படி வாக்களிக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?
அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், சட்டசபையின் கதவுகள் மூடப்படும். சட்டசபை செயலாளர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நடைமுறைகளை தொடங்குவார். 234 உறுப்பினர்களும் ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர். முதலில் ஆதரவு, பிறகு எதிர்ப்பு பிறகு நடுநிலை வகிப்போரை எழுந்து நிற்க சபாநாயகர் உத்தரவிடுவார். எழுந்து நின்று தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோர் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்.

சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா?
முடிவை தீர்மானிக்க கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும்பட்சத்தில் சபாநாயகர் வாக்களிக்கலாம். ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.

வெற்றி, தோல்வி முடிவுகளை யார் அறிவிப்பார்?
சபாநாயகர்தான் முடிவை அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications