வறண்டு கிடக்கும் காவிரியில் மஹா புஷ்கரமா?...விதிப்படி தவறு என திருப்பனந்தாள் ஆதீனம் விமர்சனம்!
வறண்டு கிடக்கும் காவிரியில் மஹா புஷ்கரம் நிகழ்ச்சி தேவையா என்று நாகை மாவட்ட சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மயிலாடுதுறை : ஆகம விதிப்படி காவேரி புஷ்கரம் என்பதே கிடையாது என்று மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள காவேரி மஹா புஷ்கரம் விழா குறித்து திருப்பனந்தாள் ஆதினம் கயிலை மாமுனிவர் கூறியுள்ளார்.
144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மஹா புஷ்கர விழாவிற்காக மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை முதல் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் துலாக்கட்டத்தில் செயற்கை தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்தத் தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர்நிரப்பப்பட்டுள்ளன.
காவிரி நீர் கரைபுரண்டோடும் மற்ற பகுதிகள் காய்ந்து கிடக்கும் போது, துலாக்கட்ட குளம் மட்டும் நீர் நிரம்பியிருப்பதற்கு இதுவே காரணம். தமிழகத்தில் காவிரி நதியோடும் 22 இடங்களில் புனித நீராடல் நடைபெற உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் இல்லாத அளவில் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
பாவ விமோசனம்
இதற்குக் காரணம் சிவ புராணத்தில் 9 புன்னிய நதிகள் சிவனிடம் தங்கள் பாவத்தை நீக்குவதற்கான இடத்தை கேட்டதற்கு மயிலாடுதுறையை சொன்னாராம் சிவன். துலாக்கட்டத்தில் புனித நீராடினால் பாவம் நீங்கும் என்று சிவன் உரைத்ததால் இங்கு வந்து புன்னிய நதிகள் பாவ விமோசனம் பெற்றதாக நம்பப்படுவதாக கூறுகின்றனர் இந்த ஊரில் வசிப்பவர்கள்.
செல்வம் பெருகும்
இந்த புராணக் கதையை விளக்கும் பொருட்டே தற்போது துலாக்கட்டத்தில் 9 கிணறுகள் செயற்கையாக அமைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. 9 கிணறுகள் நவ கன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் என்றும் நடந்தாய் வாழி காவேரி என்று மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் கலக்கும் காவிரி நீரில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலைவதோடு, செல்வம் சேரும் என்பது தான் காவேரி புஷ்கரம் என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள்.
நிதி வீண் செலவு
ஆனால் விவசாயத்திற்கு நீரின்றியும், ஆடிப் பெருக்கின் போது கூட சாக்கடை நீர் ஓடிய காவிரி ஆற்றில் தற்போது இது போன்ற ஒரு விழா தேவை தானா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். காவிரி நீரைப் பெற்றுத் தரும் வழியை விட்டுவிட்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைக் கொண்டு இது போன்ற ஒரு விழா ஏற்பாடு தேவையற்றது என்பதும் அவர்களின் கருத்து.
விவசாயத்திற்கு மட்டுமே
அக்டோபர் 1ம் தேதி முதல் விவசாயத்திற்காக மேட்டூர் அணையின் நீரை நம்பிக் காத்திருக்கின்றனர் விவசாயப் பெருமக்கள் என்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். இத்தகைய நிலையில் விவசாயத்திற்காக திறந்து விட வேண்டிய நீரை தேவையில்லாமல் ஆன்மீகத்திற்காக வீணடிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பனந்தாள் ஆதீனம் எதிர்ப்பு
இந்நிலையில் ஆகம விதிப்படி மஹா புஷ்கர விழ நடைபெறவில்லை என்று திருப்பனந்தாள் ஆதீனம் கயிலை மாமுனிவர் கூறியுள்ளார். விழாவிற்கான அழைப்பிதழ் அளிக்கப்பட்டதாகவும், இது குறித்து எந்த ஆலோசனையையும் விழாக் குழு தன்னிடம் பெற வில்லை என்று கூறும் அவர், புராணத்தில் எங்குமே காவிரி புஷ்கரம் குறிப்பிடப்படவில்லை என்கிறார்.