ஜெ. அடிச்சதை பகிரங்கமா சொன்ன சசிகலா புஷ்பாவின் தைரியத்துக்கு பிரேமலதா பாராட்டு!!
சென்னை: ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எம்.பி., வெளிப்படையாக என் உயிருக்கு ஆபத்து இருக்கு. என்னை அரெஸ்ட் பண்ணி வெச்சிருந்தாங்க, அடிச்சாங்க என்று கூறிய தைரியத்துக்காக நான் பாராட்டுறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஆனந்த விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சட்டசபை தேர்தல் தோல்வி, மாவட்டச் செயலாளர்களின் கட்சி மாற்றம், விஜயகாந்தின் உடல்நிலை, பணபேரம், கட்சியில் இருந்து பிரிந்து போகும் நிர்வாகிகள் பற்றி பேசியுள்ளார் பிரேமலதா.
தேமுதிக விஜயகாந்திற்காக உருவான கட்சி அவரை மட்டுமே நம்பி தொண்டர்கள் இருக்கின்றனர் என்று கூறும் பிரேமலதா, துரோகம் செய்து விட்டு செல்பவர்களுக்காக வருத்தப்படவில்லை என்றும் பிரேமலதா கூறியுள்ளார். அவரது பேட்டியின் முக்கிய அம்சம்
கூட்டணி முடிவுக்கு தடுமாற்றமா?
ஒரு தடுமாற்றமும் இல்லை; கால தாமதமும் ஆகலை. தேர்தல் நடந்தது மே மாதத்தில். ஆனால், மீடியா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே
தே.மு.தி.க-வைப் பற்றி எழுதி எழுதிப் பெருசாக்கிட் டாங்க. அப்பவும் கேப்டன் அமைதியாத்தான் இருந்தார்.
திமுக உடன் மீட்டிங் நடக்கவில்லை
எங்க கூட்டணி பற்றி அதிகம் பேசி, பெரிதுபடுத்தியது தி.மு.க தலைவர் கலைஞரும்தான். தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகே, எங்க ஸ்டாண்ட் என்னன்னு சொல்வது என நாங்க ரொம்பத் தெளிவா இருந்தோம். `கலைஞர்தான், `பழம் நழுவி பாலில் விழுகப்போகுது, `இதோ கனியப்போகுதுனு சொல்லிட்டே இருந்தார். தி.மு.ககூட ஒரு மீட்டிங்கூட நடக்கலை. கலைஞர் சொல்ற எல்லா விஷயங்களுக்கும் பதில் சொல்லிட்டேவா இருக்க முடியும்?
முள்பாதையை தேர்வு செய்தோம்
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கேப்டன் முன்னாடி ரெண்டு பாதைகள் இருந்தன. ஒண்ணு பூ பாதை; இன்னொண்ணு முள் பாதை. கேப்டன் இறுதி முடிவு எடுக்கவேண்டிய சூழல். நாங்க ரொம்ப ஈஸியா போன தடவை அ.தி.மு.ககூட இருந்தோம். இப்ப தி.மு.க-கூடப் போகலாம்னு ஒரு செகண்டுல முடிவு எடுத்துட்டுப் போயிருக்கலாம். ஆனா, இங்கே ஒரு மாற்றம் எப்போதான் வரும், இப்படியே இவங்க ரெண்டு பேர் கூடவும் மாறி மாறிப் போயிட்டே இருந்தா, தமிழ்நாடு என்ன ஆவது?
மாற்றத்திற்கான ஒரு அணி
அதனாலதான் மக்கள் நலக் கூட்டணிகூடச் சேர்ந்து ஒரு ரெவல்யூஷனரி முடிவை கேப்டன் எடுத்தார். எதை ஒன்றும் முயற்சி செய்தால்தான், அது நடக்குமா... நடக்காதானு தெரியவரும். இங்கே ஒரு ரெவல்யூஷனரி சேஞ்ச் நடக்கணும். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதானே தே.மு.தி.க. அதனாலதான் மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டு சேர்ந்தோம். மாற்று அணிகூடச் சேர்ந்தோமே தவிர, வேற எந்த நோக்கமும் கிடையாது.
மக்கள் மாறவில்லை
மக்களுக்காகத்தானே. கேப்டன் சொன்ன மாதிரியே அரசியலுக்கு வந்தார். இதுவரைக்கும் அதே உறுதியோடு பயணிக்கிறார். அப்போ கேப்டனுக்கு மக்கள்தானே உறுதுணையா இருக்கணும்? ஆனால், மக்கள் இன்னமும் மாறலைங்கிறது பெரிய வேதனையா இருக்கு. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியதே அந்த ரெண்டு கட்சிகளும்தான்.
பணம் விளையாடியது
சட்டசபைத் தேர்தலில் படித்தவர்களில் இருந்து பாமர மக்கள் வரை பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியதே அந்த ரெண்டு கட்சிகளும்தான். இங்கே மாற்றம் வராததுக்கு முக்கியக் காரணமே அதிமுகவும், திமுகவும்தான்.
நேர்மையான அரசியல்
தேர்தலுக்கு முன்பு யாருக்கும் பணம் தர மாட்டோம், வாங்கவும் மாட்டோம்னு நரசிம்மா கோயிலில் கேப்டன் உறுதிமொழி எடுத்துக்கிட்டார். இது மாதிரி ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஸ்டாலினையும் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம். நாங்க ஒரு நேர்மையான அரசியலைச் செய்றோம்
ரூ 300 கோடி
`வைகோ 500 கோடி ரூபாய் வாங்கிட்டார்ன்னு முதல்ல பரப்பிவிட்டாங்க. `70 எம்.எல்.ஏ-க்கள், 300 கோடி ரூபாய்னு எங்களைப் பற்றி வதந்தி பரப்பினாங்க. காசுதான் முக்கியம்னு கேப்டன் நினைச்சிருந்தா... 300 கோடி ரூபாய், 70 எம்.எல்.ஏனு போயிருக்கலாமே. 300 கோடியை வேணாம்னு சொல்ல முட்டாளா நாங்கள்?
மக்கள் நலக்கூட்டணி
மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு. அது தேர்தலோடு முடிஞ்சுபோச்சு. இனிவரும் காலங்களில் கேப்டனின் நிலைப்பாடு என்ன என்பதை, தேர்தல் வரும்போது சொல்வார்.
கடனாளி ஆகவில்லை
தங்கள் சக்திக்கு என்ன செலவுசெய்ய முடியுமோ... அதைத்தான் தே.மு.தி.கவினர் செஞ்சாங்க. யாரும் எங்களால் கடனாளியாகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த அளவு செலவு செய்த கட்சி தே.மு.தி.கதான். இது தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினரால் திட்டமிட்டுப் பரப்படும் வதந்தி. விலைக்கு வாங்கினவர்களை வைத்து இப்படிச் சொல்லவைக்கிறாங்க.
மீம்ஸ் பற்றி கவலையில்லை
மீம்ஸ் போடுறவங்க எல்லாம், சும்மா மொபைல் வெச்சுட்டு சுத்திட்டு இருக்கிறவங்க. இவங்க யாரும் ஓட்டுப்போடவே இல்லை. அது எந்த விதத்திலும் பயன் தராது. நாங்க அதை எல்லாம் பார்ப்பதுகூட கிடையாது. `காய்த்த மரம்தான் கல்லடிபடும்'னு சொல்வாங்க.
வதந்திகள் பரப்புதல்
கேப்டன் பெயரை எப்படியாவது கெடுக்கணும். அதுக்காக ரெண்டு விஷயங்களைக் கையில் எடுக்கிறாங்க. ஒண்ணு மீம்ஸ் பண்றது, ரெண்டாவது ஹெல்த் சரியில்லைனு சொல்றது. அவர் அடிக்கிறாரு, திட்டறாருன்னு கூடுதலா சொல்வாங்க. கேப்டனைப் பற்றி சொல்றதுக்கோ, எழுதுறதுக்கோ ஒண்ணுமே கிடையாது என்பதால் பரப்பப்படும் வதந்திகள் இவை.
வேஸ்ட் ஆஃப் டைம்
சட்டசபையில் அவங்க தொகுதியை மேம்படுத்துறதைப் பற்றி யாரும் ஆரோக்கியமா விவாதம் பண்ணலை. பலரையும் பெர்சனலாப் பேசுறது, புகழ் பாடுறது, இவங்க அவங்களைத் திட்டுறது, அவங்க இவங்களைத் திட்டுறதுன்னு சட்டமன்றம் நடந்துட்டிருக்கு. மக்கள் வரிப்பணம் வேஸ்ட் ஆஃப் டைமா போயிட்டிருக்கு.
தைரியத்தை பாராட்டுறேன்
சசிகலா புஷ்பா வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் `என் உயிருக்கு ஆபத்து இருக்கு. என்னை அரெஸ்ட் பண்ணி வெச்சிருந்தாங்க, அடிச்சாங்க, வம்பாக எழுதி வாங்கினாங்க'னு சொல்லியிருக்காங்க. இதன்மூலம் அதிமுகவில் பைக்குள் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் சொன்ன அந்தத் தைரியத்துக்காக நான் பாராட்டுறேன் என்று கூறியுள்ளார் பிரேமலதா.