சரோஜா மீதான புகாரில் மாற்றமே இல்லை.. எதையும் எதிர்கொள்ளத் தயார்.. ராஜ மீனாட்சி
நிதி கையாடல் புகாரை எதிர்கொள்ள எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்று தருமபுரி மாவட்ட பாதுகாப்பு நல அலுவலர் ராஜமீனாட்சி தெரிவித்தார்.
சென்னை: தன் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி கையாடல் புகாரை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். தனது குற்றச்சாட்டுகளில் இருந்து தாம் பின்வாங்க போவதில்லை என்றும் ராஜமீனாட்சி தெரிவித்தார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பணி நிரந்தரம் செய்யவும், சென்னைக்கு பணி மாறுதல் செய்யவும் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டதாக ராஜமீனாட்சி புகார் கூறியிருந்தார்.
கடந்த 7-ஆம் தேதி தன்னை அமைச்சர் சரோஜா வீட்டிற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் எந்த சூழ்நிலையிலும் பணியை விட்டு செல்ல மாட்டேன் என்றும் இதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளதாக கூறினார்.

சரோஜா அறிக்கை
இந்நிலையில் இந்த புகார் தெரிவித்து ஒரு வாரம் ஆன நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் சரோஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை வீட்டில் சந்திக்குமாறு நான் ராஜமீனாட்சியை அழைக்கவில்லை. ராஜமீனாட்சி கூறிய புகார்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை. நான் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதாக கூறுவதும் தவறு.

உள்நோக்கம்
அதிகாரிகளை சந்திக்காமல் ராஜமீனாட்சி என்னை பார்த்தது உள்நோக்கம் கொண்டது. அரசு நிதியை கையாடல் செய்ததாக அவர் மீது புகார் உள்ளது. அதை மறைக்கவே என் மீது இப்படிப்பட்ட பழியை அவர் சுமத்தியுள்ளார். 20 ஆண்டுகளாக அரசியலில் உள்ள என் மீது முதல்முதலாக ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

என் புகாரில் மாற்றமில்லை
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராஜமீனாட்சி, என் மீதான நிதி கையாடல் புகாரை நான் எதிர்கொள்ள தயார். என் மீதான புகார் பொய்யானது. நான் தற்காலிக ஒப்பந்ததாரர்தான். மாவட்ட ஆட்சியர்தான் கையெழுத்து போடும் அதிகாரி ஆவார். எனவே என் மீது துறைரீதியான விசாரணையை சந்திப்பேன்.

திரும்பப் பெற மாட்டேன்
மற்றபடி சரோஜா மீது நான் கூறப்பட்ட புகார்களை திரும்ப பெறமாட்டேன். இதற்கு முன்னர் சரோஜா எப்படி பணியாற்றினார் என்பது குறித்து நான் கருத்து ஏதும் கூறவிரும்பவில்லை என்றார் ராஜமீனாட்சி.












Click it and Unblock the Notifications