நிரந்தரமாக விடுதலை ஆகி வருவார் பேரறிவாளன்.. தாய் அற்புதம்மாள் கண்ணீர்
ஜோலார்பேட்டை: பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆகி வருவார். அந்த நம்பிக்கை உள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோல் கிடைத்துள்ளது. இதையடுத்து இன்று மாலை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு அவர் திரும்பியுள்ளார்.
முன்னதாக இதுகுறித்து அற்புதம் அம்மாள் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த தகவலை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே ஒருமுறை பேரறிவாளனை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அவர் விடுதலை செய்யப்படவில்லை. இப்போது பரோலில் வெளியிடுவது குறித்த தகவலையும் எப்படி நம்புவது என்று தெரியவில்லை.
நீண்டகாலமாக பேரறிவாளனை வெளியே கொண்டுவர முயன்று வருகிறேன். எனது மகன் வாழ்க்கை காலமெல்லாம் சிறையிலேயே கழிந்துவிட்டது. எனவேதான் நான் விரக்தியில் நம்ப முடியாமல் பேசுகிறேன். என்னை யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். ஒருவேளை, இத்தகவல் உண்மையெனில், பரோலில் வெளியேவர ஏற்பாடு செய்த அனைவருக்குமே நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வாறு கூறிய அற்புதம்மாள், தேம்பி அழ ஆரம்பித்தார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில், பேரறிவாளனை விடுதலை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் பேரறிவாளன் மத்திய அரசு விசாரணை அமைப்பால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி என்பதால் இந்த தீர்மானத்தை வைத்து அவரை விடுதலை செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது மகன் வீடு திரும்புவது குறித்து அற்புதம் அம்மாள் இன்று இரவு செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மகனுக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. பேரறிவாளன் நிரந்தரமாக வீடு திரும்பி வருவார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.