லோக்சபா தேர்தலில் போட்டி வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை- திமுக தானாகவே தோல்வி அடையும்: மு.க. அழகிரி
சென்னை: லோக்சபா தேர்தலில் தமது ஆதரவாளர்களை போட்டி வேட்பாளர்களாக நிறுத்தப் போவதில்லை என்றும் திமுக தானாகவே தோல்வியை தழுவும் என்றும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக மு.க. அழகிரி நேற்று திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுகவில் ஜனநாயகமே செத்துவிட்டது என்று நேற்று ஊடகங்களுக்கு அழகிரி பேட்டி கொடுத்திருந்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி,

தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. நியாயத்துக்காக போராடியதற்காக தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள். ‘வருங்காலமே' என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
என் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் நீக்கம் தொடர்பாக நியாயம் கேட்டேன். அதற்கு கிடைத்த பரிசுதான் நீக்கம். போஸ்டர் ஒட்டக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லையே..
தி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் தேவை இல்லை. லோக்சபா தேர்தலில் தி.மு.க. தானாகவே தோற்கும். கட்சியில் இருந்த முறை கேடுகளை எடுத்து கூற முற்பட்டது நான் செய்த தவறு.
தி.மு.க.வில் நடந்து இருக்கும் ஊழலுக்கான ஆதாரங்களை மதுரையில் 31-ந் தேதி வெளியிடுவேன். லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன்.
திமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தவும் தேவையில்லை.. திமுக தானாகவே தோல்வி அடையும்.
திமுகவில் ஊழல்
மேலும் ஏ.என்.ஐ.க்கு சிறப்பு பேட்டியளித்த அழகிரி, திமுகவில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன் என்றும் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications