விஜயகாந்துடன் மேடை ஏறமாட்டேன்… டாக்டர் ராமதாஸ்
சென்னை: பாஜக கூட்டணியில் இணைந்தாலும் நடிகருடன் (விஜயகாந்த்) ஒரு போதும் மேடை ஏறமாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக உடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாமகவும், தேமுதிகவும் ஈடுபட்டு வரும் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன.
ஒருவேளை கூட்டணி அமைந்தாலும் கூட்டணித்தலைவர்கள் ஒன்றாக இணைந்து மேடை ஏறி கையை இணைத்து போஸ் கொடுப்பார்களா? என்பது சந்தேகம்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அனல்பறந்த பாமக நிர்வாககுழு
கூட்டணியில் இணையும் முன்னதாக கடந்த 6ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் அவரச ஆலோசனை கூடியது. அதில் பேசிய ராமதாஸ் உணர்ச்சிக் கொந்தளிப்போடு பேசினார் என்கின்றனர் அருகில் இருந்தவர்கள்.
காடுவெட்டி குருவின் பாராமுகம்
நிர்வாகக்குழு கூட்டத்திற்கு வருவதற்காக ஜெயங்கொண்டத்தில் இருந்து தைலாபுரம் கிளம்பிய குரு, கடைசியில் வராமலேயே பாண்டிச்சேரி போனது வேறு கதை. கடைசியில் அவரை சமாதானப்படுத்தியதில் 12.30 மணிக்குத்தான் வந்தாராம் குரு. ஆனாலும் கூட்டணி அமைப்பதில் இஷ்டமில்லை என்கிற ரீதியிலேயே கருத்தை பதிவு செய்தாராம் குரு.
நடிகருடன் மேடை ஏற மாட்டேன்
அதைக் கேட்ட ராமதாஸ் அந்த நடிகருடன்( விஜயகாந்த்) ஒரே மேடையில் தோன்றி பேசுவதெல்லாம் என்னோடு முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். குருவைத் தவிர அந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் பாஜக உடன் கூட்டணி என்பதையே வலியுறுத்தியுள்ளனர். எனவேதான் ஜி.கே.மணியும், ஏ.கே.மூர்த்தியும் கமலாலயத்திற்கு கூட்டணிப் பேசப் போயுள்ளனர்.
அவங்களை தேடிப்போறாங்களே
தேமுதிகவை தேடி போகின்றனர். ஆனால் நமக்கு அந்த மரியாதை இல்லையே என்கிற ரீதியில் டாக்டர் ராமதாசிடம் சிலர் பற்றவைக்கவே அதுவும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாம்.
வன்னியர் பெல்ட்டுக்கு குறி
சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, அரக்கோணம்,திருவண்ணாமலை என வன்னியர்கள் சப்போர்ட் உள்ள தொகுதிகளை பாமகவிற்கு விட்டு கொடுக்கத் தயங்கும் பாஜக, ஆரணியை புதிய நீதிக்கட்சியின் ஏ.சி. சண்முகத்திற்கும், கிருஷ்ணகிரியை பாஜகவிற்கும், சேலத்தை தேமுதிகவிற்கும் ஒதுக்க நினைப்பது வேறு ராமதாசை கோபம் கொள்ளச் செய்துள்ளது என்கின்றனர்.
8 சீட் தான் ஓகேன்னா சொல்லுங்க
மொத்தமே 8 சீட்டுதான்... ராஜ்யசபா சீட் பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்று பாஜக கறார் காட்டவே அதற்கு அன்புமணி ஒத்துக்கொண்டு விட்டதாக கூறுகின்றனர். வியாழக்கிழமைக்குள் பாமக கூட்டணி உறுதியாகிவிடும் என்றே கூறுகின்றனர் பாமக தரப்பில்.
அன்புமணியின் நிர்பந்தம்
2011ம் ஆண்டு தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றார்கள். மதிமுக உடன் கூட்டணி சேருவீர்களா என்று கேட்டதற்கு அதுவும் திராவிட கட்சிதானே என்றார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இப்போது தேசியக்கட்சியான பாஜக உடனும் திராவிடக்கட்சிகளான மதிமுக, தேமுதிக உடனும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தத்தினை உருவாக்கியுள்ளார் டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.