யுவராஜ் பாணி.. சரணடையப்போவதாக வாட்ஸ்அப்பில் 'அறிவித்த' சர்வேயர் கொலை குற்றவாளி
சேலம்: சர்வேயரை காரோடு தீ வைத்து கொளுத்தி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளி அஸ்ரப் அலி இக்ரமுல்லா, வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட தகவல் இப்போது வைரலாக பரவி வருகிறது.
கடந்த மே 28ம் தேதி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகில் கார் ஒன்று தீப்பற்றி எறிவைதையும், அங்கிருந்து இருவர் தப்பித்து ஓடியதையும் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து தப்பி ஓடிய இருவரில் சக்தி வேல் என்பவனை விரட்டிப்பிடித்த காவல்துறையினர்,காருக்குள் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.
சக்திவேலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒசூரைச் சேர்ந்த குவளைச் செல்வன் என்பதும், அவர் ஒசூர் நகராட்சியில் நில அளவையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக கூலிப்படையை ஏவி அஸ்ரப் அலி இக்ரமுல்லா என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள இஸ்ரமுல்லா அவ்வப்போது வாட்ஸ் அப் மூலம் ஆடியோ, வீடியோக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். காவல்துறை நிர்பந்தத்தால், தலைமுறைவாக இருப்பதாக சில தினங்கள் முன்பு, வாட்ஸ் அப் வீடியோ அனுப்பிய இஸ்ரமுல்லா, தற்போது மற்றொரு வாட்ஸ் அப் ஆடியோவை அனுப்பியுள்ளார்.
அதில், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி முன் நாளை சரணடைய இருப்பதாகவும், அதுவரை தான் உயிரோடு இருப்பேனா என தெரியாது எனவும் அவர் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எங்கிருந்து இந்த வீடியோ அனுப்பப்படுகிறது என்பதை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்ட யுவராஜ் இதேபோல வாட்ஸ்அப்பில் அறிவித்துவிட்டு வந்து கோர்ட்டில் சரணடைந்த சம்பவம் காவல்துறை மீது விமர்சனங்களை எழுப்பியது நினைவிருக்கலாம்.