கவுண்டவுன் ஸ்டார்ட்.. இன்னும் 60 நாட்கள் தான் பொறுத்திருப்பேன்.. டிடிவி தினகரன்
சென்னை: கட்சி இணைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னும் 60 நாட்கள் காத்திருப்பேன் இல்லை என்றால் நானே கட்சியை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தமது இல்லத்தில் டிடிவி தினகரன் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் தான் முடிவு செய்வார். பொதுச் செயலாளர் முடிவுக்கு 122 எம்.எல்.ஏக்களும் கட்டுப்படுவார்கள். எனக்கு எதிராக பேசும் அமைச்சர்கள் தங்களின் நிலையை விரைவில் மாற்றிக் கொள்வார்கள்.
திவாகரன் மகன் ஜெயானந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்; அதில் நான் கருத்துகூற விருப்பமில்லை. 122 எம்.எல்.ஏக்களையும் நான் நண்பனகானவே நினைக்கிறேன்; அவர்கள் யாருக்கோ பயப்படுகிறார்கள். கட்சி நடத்தும் இப்தார் விருந்திற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.
கூவத்தூரில் எந்த தவறும் நடைபெறவில்லை. பேர விவகாரம் குறித்து ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கணமில்லை. ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்த எந்த விசாரணைக்கும் தயார். திகார் சிறையில் இருந்து வந்துபிறகு கட்சி இணைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னும் 60 நாட்கள் காத்திருப்பேன் இல்லை என்றால் நானே கட்சியை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.