ரஜினி இணைந்தாலும் பாஜகவுக்கு பலன் ஏற்படுமா?
சென்னை: ரஜினிகாந்த்தை எப்படியும் பாஜகவில் சேர்த்துவிட வேண்டும் என்று பாஜக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டுள்ளது.
ஆனால் ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்தாலும், பாஜகவுக்கு பெரிய நன்மை கிடைத்துவிடுமா என்பது கேள்விக்குறிதான்.
நரசிம்ம ராவ் அரசியல்:
காங்கிரஸ் கட்சியில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அக்கட்சிக்கு ரஜினியை இழுக்க முயற்சி நடைபெற்று அது தோல்வியில் முடிந்தது வரலாறு. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டதாக ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுக்க, அவரது ஆதரவை நாம் பெற வேண்டும் என மூப்பனார் சொல்ல, அவரை நரசிம்ம ராவிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் தீவிரமாக இருந்த நரசிம்ம ராவ், எப்படியாவது இந்த விஷயத்தில் ரஜினியை அடக்கி வைக்க முயன்றார். இதனால் மூப்பனாரை பக்கத்து அறையில் உட்காரச் சொல்லிவிட்டு ரஜினியுடன் தனியே பேசினார். நீங்கள் காங்கிரசுக்கு ஆதரவு தந்தால் மட்டும் போதாது, கட்சியில் இணைய வேண்டும் என்று ஒரு கண்டிசனைப் போட்டார், இதை ரஜினி ஏற்க மாட்டார் என்று தெரிந்தே.
தாமக:
எதிர்பார்த்தபடி இந்த கண்டிசனை ரஜினி ஏற்கவில்லை. இதையடுத்து ரஜினிக்கு கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார் நரசிம்ம ராவ். மூப்பனார்- ரஜினியின் எதிர்ப்பை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். இதையடுத்து ரஜினி ஆதரவை மட்டுமே நம்பி தாமகவை உருவாக்கினார் மூப்பனார். தனிக் கட்சி உருவாக்கும் வேலை ப.சிதம்பரத்திடம் தரப்பட்டது. அவரும் 3 நாட்களில் கட்சி, கொடியை உருவாக்கி, தேர்தல் கமிஷனின் அனுமதி வரை வாங்கித் தந்து அசத்தினார்.
தாமகவும் திமுகவும் இணைந்து போட்டியிட, ரஜினியின் வாய்ஸோடு இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றது.
குமரி அனந்தன்- தமிழிசை
மூப்பனார் தலைமையில் தாமக உருவானபோது காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். இப்போது ரஜினியை பாஜகவில் இழுக்க முயற்சிக்கும் மாநிலத் தலைவர் தமிழிசையின் தந்தை. மூப்பனாரை தனிக் கட்சி ஆரம்பிக்க வைத்து ரஜினி கூட்டிச் சென்றபோது, என்ன செய்வது என்றெ தெரியாமல் முழி முழி என முழிக்கவே முடிந்தது குமரி அனந்தனால். இது வரலாறு.
எடுபடாத வாய்ஸ்...
இந் நிலையில் அடுத்து வந்த சில தேர்தல்களில் ரஜினி அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக வாய்ஸ் தந்தாலும் அது எடுபடவில்லை. இதையடுத்து வாய்ஸ் தருவதையே அவர் நிறுத்திவிட்டார். ஆனாலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்று ஒரு நியூஸ் வரும். ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பரபரப்பை உருவாக்குவார்கள். ஆனால் எதுவுமே நடக்காது. இதனால் ரஜினி வாய்ஸ் கதை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து கொண்டுள்ளது.
இந் நிலையில் தான் அவர் கட்சிக்குள் இழுக்க முயற்சிக்கிறது பாஜக.
முகமூடி தேவை
அதிமுகவுக்கு ஜெயலலிதாவும், திமுகவுக்கு கருணாநிதியும் முகங்களாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் சொல்லிக் கொள்வார் யாரும் கிடையாது. பவர்புல் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையாவது காங்கிரஸ் முன்னிறுத்தி பார்க்கலாம். ஆனால் பாஜகவில் அப்படி யாருமே இல்லை.
ரஜினியேதான் வேணுமா..
எனவே பாஜகவுக்கு இப்போது அவசரமாக தேவைப்படுவது தமிழர்களுக்கு நெருக்கமான ஒரு முகம். அந்த முகம், பாஜகவின் தேசிய பார்வையுடன் ஒத்துப்போகும் ரஜினியுடையதாக இருந்தால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் அக்கட்சிக்கு.
இருவரை விட்டால் ஆளில்லை
கருணாநிதி ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்த தவறை சுட்டிக் காண்பித்து ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதும், பிறகு இவர் செய்யும் தவறை அவர் சுட்டிக் காண்பித்து மறுபடியும் ஆட்சி செய்வதுமாக தமிழகத்தில் தொடரும் இணைப்பு ரயிலின் பெட்டி துண்டிக்கப்படும் நிலை இப்போது உள்ளது. திமுக, அதிமுகவின் இரு பெரும் தலைவர்களின் தலைக்கு மேலே ஊழல் எனும் கத்தி தொங்கியபடி இந்த இணைப்பு சங்கிலியை அறுக்க காத்திருக்கிறது.
வெற்றிடத்தை நிரப்ப பாஜக
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மாற்றுக்கட்சியாக உருவெடுக்க பாஜக துடிக்கிறது. தேமுதிக, பாமக போன்ற இரண்டாம் நிலை கட்சிகளுக்கு மக்கள் சில முறை வாய்ப்பு தந்தும், நிர்வாக சிக்கல்களால் பெரிய அளவில் அக்கட்சிகள் சோபிக்க முடியவில்லை. ஆனால் பல மாநிலங்கள், மற்றும் மத்தியில் ஆட்சி செலுத்தும் அனுபம்மிக்க பாஜக, தமிழகத்தில் கோலோச்ச கிளம்பியுள்ளது. இதற்காக ரஜினியை இழுக்க அமித்ஷா முதல் தமிழிசை வரை கிளமிறங்கியுள்ளனர்.
சூப்பர் 'ஸ்டார்' மின்னுமா?
ஆனால் ஒருவேளை ரஜினி வந்தாலும், பாஜகவுக்கு அதனால் ஏதாவது நன்மை விளைந்துவிடுமா என்றால், ரஜினியே கூட ஆமாம் என்று கூற மாட்டார். ஏனெனில் 90களில் இருந்த கரிஷ்மாவும், உடல் பலமும் இப்போது ரஜினியிடம் இல்லை. இப்போதும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என்றாலும், பழைய அளவுக்கு ரசிகர்கள் தீவிரமானவர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமே. பாபா பட பிரச்சினையில், பாமகவை எதிர்கொள்ள முடியாமல் ரஜினி ரசிகர்கள் திணறியது பலவீனத்தை பறைசாற்றியது.
மேலும் ரஜினி உள்ளே நுழைந்த மறுநிமிடம் பாஜக கூட்டணியில் இருந்து பாமக, விஜய்காந்த், வைகோ நிச்சயம் வெளியேறுவர். அதிமுக அல்லது திமுகவுடன் சேர்ந்து பலமான கூட்டணியை உருவாக்குவர். இதனால் வெறும் ரஜினியை மட்டும் வைத்துக் கொண்டு பாஜகவால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியுமா என்பது சந்தேகமே!
சக்தி கொடு..
சிங்கப்பூரில் சிகிச்சை முடித்து ஆரோக்கியமாக திரும்பி வந்தவர் ரஜினி. பாஜக என்ற தேரை முட்டுக் கொடுத்து தூக்கும் உடல் பலம் ரஜினிக்கு இல்லை. மன பலம் இருந்தாலும், லிங்கா சூட்டிங்கில் சின்ன சின்ன சண்டை காட்சிகளில் கூட டூப் நடிகரை வைத்துத் தான் காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதனால் ரஜினியால் இப்போதைக்கு அதிகமாக மெனக்கெட முடியுமா என்பதும் சந்தேகமே.
நண்பர் வழியில் ரஜினி?
திமுகவில் கருணாநிதி, காங்கிரசில் சிதம்பரம், அதிமுகவில் சமீபமாக ஜெயலலிதா, பாஜகவில் மோடி என ரஜினிக்கு ஆல்பார்ட்டியிலும் பழகிய ஆட்கள் உள்ளனர். எனவே, கர்நாடகாவில் தனது நண்பர் ராஜ்குமார் எப்படி அனைத்து கட்சியினருடனும் இணைந்து, தனது இமேஜை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல, தமிழகத்திலும் 'அணிசேரா' நிலையை தொடரவே ரஜினி விரும்புவதாக தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்ததும், பாஜகவின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்கவே என்கிறார்கள்.