பாஜக அணியில் இருந்து விலகுகிறது இந்திய ஜனநாயகக் கட்சி?
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் அதிருப்தியில் இருப்பதா பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய ஜனநாயகக் கட்சியின் பிற மாநிலங்களுக்கான அமைப்புச் செயலர் சேலம் இரா.லட்சுமணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாஜக கூட்டணியின் உத்தேச பட்டியல் தொலைக்காட்சிகளில் வெளியானது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அந்தப் பட்டியல் உண்மையானதாக இருந்தால், எங்கள் கட்சி அதற்கு அதிருப்தி தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் பாஜகவை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாத நேரத்தில், நரேந்திர மோடியை அழைத்து வந்து மாபெரும் கூட்டத்தைக் கூட்டி, அதை பாஜக பெயரில் நாங்கள் நடத்தினோம்.
நாங்கள் சந்தர்ப்பவாதத்துக்காக பாஜகவுடன் கூட்டணி சேரவில்லை. மாறாக, அவர்களின் கொள்கைக்காகவே கூட்டணி வைத்தோம்.
தொடக்கத்தில் நாங்கள் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்டோம். அதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளை மதித்து கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 2 தொகுதிகளைக் கேட்டோம். கள்ளக்குறிச்சி தனது சொந்தத் தொகுதி என்பதால், எங்களது கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அந்தத் தொகுதியின் தற்போதைய திமுக எம்.பி. ஆதிசங்கர் செய்யாததையும் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளார்.
எங்கள் கட்சிக்கு கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். ஒருவேளை அப்படி ஒதுக்கப்படாவிட்டால், வருகிற 17-ந் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு, பாஜக கூட்டணியில் தொடருவது குறித்த இறுதி முடிவை பாரிவேந்தர் வெளியிடுவார் என்றார் லட்சுமணன்.