"எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்"...டாஸ்மாக் கடை கொண்டு வாருங்கள்... கதறும் "குடிமகன்கள்"....
தருமபுரி : எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால், எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை கொண்டு வாருங்கள் என்று புட்டிரெட்டிப்பட்டி கிராம மக்கள் அரசுக்கு விநோத கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மது ஒழிப்பு வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசும் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கலாமா என்று கூட யோசித்து வருகிறது.
டாஸ்மாக் வேண்டும் என மனு
இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் மதுபாகக்கடை வேண்டும் என்று வலியுறுத்தி புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட "குடிமகன்கள்" குழு மனு ஒன்றையும் அளித்துள்ளது.
குடிமகன்கள் சொல்லும் காரணம் தான் ஹைலைட்
தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை. இதனால் மதுபானம் வாங்குவதற்காக பொம்மிடி அல்லது கடத்தூருக்கு சுமார் 7 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
விபத்தில் சிக்கும் குடிமகன்கள்
இதில் போகும் போது பரவாயில்லை, வரும் போது குடிபோதையில் சாலை விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதுபோல ஏராளமானோர் உயிரிழந்திருப்பதால், எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று கூறியிருப்பதுதான்.
ஆவலுடன் காத்திருக்கும் "குடிமகன்கள்"
தங்கள் உயிரை அரசு காப்பாற்றும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் தர்மபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி கிராமத்தின் "குடிமகன்கள்"