நீயா, நானா? பாஜகவினர் கடும் மோதல்.. சேர்களை தூக்கி வீசி தாக்குதல்.. பரபரத்துபோன கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக சார்பில் நடந்த சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தற்போதைய மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்களின் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் நாற்காலிகளை தூக்கி வீசி சண்டையிட்டு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது மேடைகளிலேயே சண்டையிட்டு கொள்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு தேசிய கட்சி, மாநில கட்சி என்ற பாகுபாடு இல்லை.
மத்தியில் ஆளும் பாஜக முதல் மாநிலத்தை ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் நிர்வாகிகள் கூட மேடைகளில் அடித்து கொண்டு மண்டை உடைத்த சம்பவங்கள் இதற் கு முன்பு நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் மோதல்
இந்நிலையில் தான் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜகவினர் தனியார் மஹாலில் நாற்கலி தூக்கி வீசி பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது எதற்காக நடந்தது? மோதலுக்கான காரணம் என்ன? என்பது பற்றிய அனைத்து தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்விபரம் வருமாறு:
நியமன நபர்கள் மாற்றம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தற்போதைய மாவட்ட பாஜக தலைவர் அருள் தரப்பில் முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரன் நியமித்த நபர்கள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நாற்காலிகளை தூக்கி வீசி மோதல்
இதற்கு பாலசுந்தரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. இருதரப்பினர் நாற்காலிகளை தூக்கி வீசி மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. மேலும் அந்த தனியார் மஹால் பரபரப்பு உருவாகி பதற்றம் ஏற்பட்டது.
போலீஸ் பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்தவுடன் சங்கராபுரம் போலீசார் உடனடியாக மஹாலுக்கு வந்தனர். இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பாஜகவில் முன்னாள் மாவட்ட தலைவர், தற்போதைய மாவட்ட தலைவர்களின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவம் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.