7 ஆண்டுகளில்.. பசுவின் பெயரால்.. 28 கொலைகள், 124 பேர் படுகாயம்.. 30 இடங்களில் வன்முறை: போதுமா?
2010ம் ஆண்டில் இருந்து இந்த 7 ஆண்டுகளில் பசுவின் பெயரால் 28 கொலைகள் நடந்துள்ளன. 124 பேர் அடித்து படுகாயம் அடைந்தனர். 30 இடங்களுக்கு மேல் வன்முறை நடைபெற்றுள்ளது.
சென்னை: இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து மனித உயிர்களை அடித்து கொல்வது மிகச் சாதாரணமாக நடந்தேறி வருகிறது எந்த கேள்விகளும் இல்லாமல்.
பசுவை பாதுகாக்கிறோம் என எங்கோ ஒன்று நடந்து கொண்டிருந்து கொலைகள் தற்போது எங்கு பார்த்தாலும், நடந்தேறி வருகின்றன.
குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது. அதுவும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்திற்கு பின் இது மேலும் அதிகரித்துள்ளது.
தாத்திரி முதியவர் அக்லக் அடித்துக் கொலை
2015 ஆண்டு மே 30ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லக் என்ற முதியவரை அடித்தே கொன்றார்கள் பசுப் பாதுகாவலர்கள்.
ரயில் நிலையத்தில் தாக்குதல்
அதே ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார். 2016 ஜனவரி 13ல் மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தூக்கிட்டு கொலை
2016 மார்ச் மாதம் 18ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி 3 இஸ்லாமிய இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிட்டு படுகொலை செய்தனர் இந்துத்துவ அடிப்படைவாதிகள்.
அப்பாஸ் கொலை
அதே ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார். 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
உலுக்கிய ஊனா
2016 ஜூன் 10ம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்து ‘அழகு' பார்த்தனர் இந்துத்துவவாதிகள். 2016 ஆண்டு ஜூலை 15ல் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஊனாவில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட தம்பதியினர்
2016ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார். 2016ம் ஆண்டு ஆகஸ்டு 24ல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
பொது இடங்களில் அத்துமீறல்
இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி ராஜஸ்தானில் 2 பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர். ஜூன் 23 தேதி டெல்லி அருகில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி 4 பேர் தாக்கப்பட்டனர்.
குறி வைத்து தாக்கப்படும் முஸ்லிம் மற்றும் தலித்துகள்
2017 ஜுன் 28ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. பசுவின் பெயரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள்.
தொடரக் கூடாது
2010 ஆண்டு முதல் மாட்டிறைச்சி விவகாரத்தில் 28 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 124 பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பசுவின் பெயரால் மனித உயிர்களை பலி கொல்வதை உடனடியாக இந்துத்துவ அமைப்புகள் நிறத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.