ஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை.. ஆச்சரியத்தில் தமிழகம்!
சசிகலாவுக்கு நெருக்கமான நபர்கள் இருக்கும் 190 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கின்றனர்.
Recommended Video

சென்னை: சசிகலாவுக்கு நெருக்கமான நபர்கள் இருக்கும் 190 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கின்றனர். தமிழக வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை ஆகும்.
கொடநாட்டு எஸ்டேட்டில் வீட்டு வேலைக்காரராக இருக்கும் சஜீவன் தொடங்கி திவாகரன், தினகரன் வரை யாரும் விதிவிலக்கில்லாமல் இந்த சோதனையில் சிக்கி இருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கும் நடராஜன் கூட இந்த சோதனையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. காலை 6 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை தமிழகத்தைப் பரபரப்பாக்கி விட்டது.

ஜெயா டிவியில் தொடங்கிய ரெய்ட்
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலையில் இங்குதான் முதல்முதலாக சோதனை தொடங்கப்பட்டது. அங்கு நடக்கும் போதே சரியாக சில நிமிட இடைவெளியில் நமது எம்ஜிஆர் அலுவலகத்திலும் சோதனை தொடங்கியது. மிகப்பெரிய ஐடி ரெய்டுக்கு இந்த இடத்தில்தான் புள்ளையார் சுழி போடப்பட்டது. ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடும் இந்த ரெய்டில் சிக்கியது.

ஜாஸ் சினிமாஸில் மாஸ் காட்டிய அதிகாரிகள்
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத ஜாஸ் சினிமாஸ் அலுவலகம்தான் அதிகாரிகளின் அடுத்த குறியாக இருந்தது. ஜாஸ் சினிமாவின் உண்மையான ஓனர்கள் அதிமுகவுக்கு சொந்தம் இல்லாத எம்.ஆர். அன்புக்கரசு, எஸ், நாகையனிடம் ஆகியோர் என்றாலும் பங்குகளில் பாதி சசிகலா கைவசம்தான் உள்ளது. சசிகலா குடும்பம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் 48.4% பங்குகளை வைத்துள்ளன.

கொடநாடு எஸ்டேட்டில் ரெய்ட்
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. காலை 7.30 மணியில் இருந்து கொடநாட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒய்வு எடுக்க செல்லும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வேலைக்காராக இருக்கும் சஜீவன் என்ற மரம் வெட்டு தொழிலாளி வீட்டிலும் சோதனை நடந்தது.

தினகரனும் மாட்டினார்
தினகரன் வீடும் இந்த சோதனையில் இருந்து தப்பவில்லை. அடையாறில் உள்ள அவரது வீட்டில் காலை எட்டுமணிக்கு புகுந்த அதிகாரிகள் இன்னும் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் ''இது மோசமான பழிவாங்கும் செயல்'' என அவர் கூறிய அடுத்த நிமிடத்தில் அங்கு சோதனை நடக்க தொடங்கியது.

திவாகரனும் தப்பவில்லை
இந்த சோதனையில் அதிகம் பாதிக்கப்பட்டது திவாகரன்தான். மன்னார்குடியில் பவர் சென்டராக இருக்கும் திவாகரனை அதிகாரிகள் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவரது வீடு மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் கல்லூரி, அவரது கார் டிரைவரின் வீடு, வடுவூரில் இருக்கும் அவர் உறவினர் வீடு, அவரது வக்கீல், கல்லூரி நிர்வாகி, செயலாளர் என ஒரு இடம் விடாமல் சல்லடை போட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

நடராஜன் மட்டும் விதிவிலக்கா என்ன
தஞ்சையில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து தற்போதுதான் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். இன்னமும் அவர் மருத்துவ கண்காணிப்பில் தான் உள்ளார். அவருக்கு அருளானந்த நகரில் வீடு உள்ளது. அங்குதான் தற்போது சோதனை நடைபெறுகிறது.

சிக்கலில் மாட்டிய பணியாளர்கள்
இந்த சோதனை காரணமாக பெரிய ஆட்கள் மட்டும் இல்லாமல் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களும் சிக்கி உள்ளனர். சசிகலா பரோலில் தங்கிய கிருஷ்ணப்பிரியா வீட்டில் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. கீழதிருப்பாலக்குடியில் இருக்கும் திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும் சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் பலரது டிரைவர்கள் வீட்டில் சோதனை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இங்க மட்டும் இல்ல
தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, டெல்லியிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு எங்கு எல்லாம் தொடர்பு இருக்கிறதோ அங்கு எல்லாம் சோதனை நடக்கிறது. சசிகலா சென்று ஒருவேளை உணவு சாப்பிட்ட வீடுகளில் கூட சோதனை நடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. கணக்குபடி தற்போது 190 இடங்களையும் தாண்டி சோதனை நடைபெற்று வருகிறது.
மொத்தத்தில் ஒரு குடும்பத்தைக் குறி வைத்து தமிழகத்தில் இவ்வளவு பெரிய ரெய்டு நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications