சசி, தினகரன் உறவினர் வீடு, அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கின - சோதனை தொடரும்: வருமான வரித்துறை
சசிகலா, தினகரன் உறவினர் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இச்சோதனை தொடரும் என்கிறது வருமான வரித்துறை
சென்னை: சசிகலா, தினகரனின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கியமான ஆவணங்கள் ஏராளமாக சிக்கியுள்ளன; இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலா, தினகரனின் உறவினர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் நாடு முழுவதும் 2,000 அதிகாரிகள் இன்று மாபெரும் வருமான வரி சோதனை நடத்தினர். 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது இச்சோதனை.
இச்சோதனையில் பல இடங்களில் இருந்தும் ஏராளமான ஆவணங்கள் சிக்கி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆவணங்களின் மதிப்பீட்டை கணக்கீடும் பணி தற்போது நடைபெறுகிறது.
ஆகையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் விவரங்களை உடனே தெரிவிக்க இயலாது எனவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வருமான வரித்துறையினரின் சோதனையும் விசாரணையும் தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.